தமிழ் மீது ஹிந்தியை திணிக்க முடியாது

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். அவர்களில் 20 பேர் ‘தமிழ்நாடு தரிசனம்’ என்ற பெயரில் தமிழகத்தின் பெருமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட அவர்கள் நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். ஆளுநர் மாளிகையில் அந்த மாணவ, மாணவிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார். ‘தமிழ்நாடு தர்ஷன்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், தமிழ் மொழி மீது ஹிந்தி உட்பட வேறு எந்த மொழியையும் திணிக்க முடியாது என்பது உட்பட பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். “ஹிந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. ஹிந்தி சில நூறு வருடங்கள்தான் பழமையானது. சம்ஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் அல்லாத பிறமொழி பேசுபவர்கள், தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாரதத்தின் ஆன்மிகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழகம் உள்ளது. தமிழகத்துக்கு வெறும் 3,500 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கும் முந்தைய பண்டைய வரலாறும் உண்டு. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயிலும் மாணவர்கள் நிச்சயம் உயர்கல்வியை தமிழில் பயில வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள். திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும். திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன. எனவே நீங்கள் அனைவரும் தமிழை ஆழமாகப் படித்து, தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும். 2047ம் ஆண்டு நமது பாரதம் முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்படும்” என்று தெரிவித்தார். பின்னர், ஹிந்தி மற்றும் நேபாளி மொழிகளில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ள திருக்குறளை மாணவர்களுக்கு ஆளுநர் பரிசளித்தார்.