செயலிகள் மூலம் மோசடி: தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சிபிஐ சோதனை

மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

மொபைல் செயலிகள் மூலமாக பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த சோதனையின்போது கிரிப்டோ கரன்சி முறையில் முறைகேடு நடந்திருப்பதாக 2 நிறுவனங்கள், அதன் இயக்குனர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
அவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், அந்நிறுவனங்கள் மூலமாக சுமார் 150 வங்கி கணக்குகள் மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய 10 மாநிலங்களில் 30 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது.