சென்னை — மைசூரு வந்தே பாரத் ஏப்ரல் 5ம் தேதி முதல் இயக்கம்

சென்னை சென்ட்ரல் – – மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலின் வழக்கமான சேவை, ஏப்ரல், 5ம் தேதி துவங்கும். அதுவரை, சென்னை சென்ட்ரல் — பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் மட்டுமே, வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் — மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைக்கிறார்.

எனினும், இந்த ரயில் ஏப்ரல் 4ம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – – பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து வாரத்தில் புதன் தவிர மற்ற நாட்களில் மாலை 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், அதேநாள் இரவு 9:15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கமாக, பெங்களூரில் இருந்து காலை 7:50க்கு புறப்படும் ரயில், அதேநாள் நண்பகல் 12:25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், காட்பாடி நிறுத்தங்களில் நின்றுசெல்லும். ஏப்.,5ம் தேதி முதல் மைசூரு – – சென்னை சென்ட்ரல் இடையே வழக்கமான சேவை துவங்கும். மைசூரில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12:25க்கு வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5:00க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், அதேநாள் இரவு 11:20 மணிக்கு மைசூரை அடையும்.

இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்படும்; டிக்கெட் முன்பதிவு விபரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.