சாட்சியாக வந்தவரின் தந்தை தற்கொலை

கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி ரயில் பயணிகளை டெல்லியை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதியான ஷாருக் சைஃபி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் குறித்து டெல்லியை சேர்ந்த இளைஞரான முகமது சைபி என்.ஐ.ஏவிடம் சாட்சி கூறினார். அவர் இதனை நேரில் பார்த்தவர் என்றும் ஷாருக் சைஃபியுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது தந்தை மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை முகமது சைபி, என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் கொச்சிக்கு வந்து சாட்சி கூறினார். அவரை மீண்டும் வாக்குமூலம் அளிக்க வருமாறு என்.ஐ.ஏ அதகாரிகள் கூறியிருந்தனர். அதன்படி மெண்டும் கொச்சிக்கு வந்து என்.ஐ.ஏ அலுவலகத்தில் சாட்சி கூறிய முகமது சைபி, மீண்டும் தான் தங்கிய விடுதிக்கு சென்ற போது அங்குள்ள கழிவறையில் அவரது தந்தை முகமது ஷஃபீக் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்கு வந்து முகமது ஷஃபீக்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாட்சி கூற வந்தவரின் தந்தை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் மர்மமாக உள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பின்னால் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.