சமுதாயத்திற்கே ஒரு சங்கர(ர்) கவசம்!

  • மீனாட்சி புரத்தில் மிகப் பெரிய அளவுக்கு வெளிநாட்டு சக்திகளின் தாக்குதல் காரணமாக ஹிந்து மக்கள், இஸ்லாம் மதத்தை தழுவுகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டு அதை தடுத்து நிறுத்த ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எடுத்த முயற்சிகள் மிகவும் போற்றத்தக்கது. அவருடைய அருளாசியுடன் வழிகாட்டுதலுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் விரிவான முயற்சியாலும் பல்வேறு ஹிந்து சமய பெரியோர்களாலும் மீனாட்சிபுரம் மதமாற்றம் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டது.
  • சமீபத்தில் பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  தனது நூலில் குறிப்பிட்டது போல் அந்நிய கிறிஸ்தவ மிஷனரிகளின் கடுமையான முயற்சியினாலும் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஜெயலலிதா ஆகியோரின் கூட்டு சதியாலும் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை ஒரு கொலை வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஹிந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி திருநாள் அன்று கைது செய்து சிறையில் அடைத்து, பிணையில்கூட வரமுடியாத அளவிற்கு அநியாயம் நடைபெற்றது. இதற்கு  ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஹிந்து மதத்தினரை மற்ற மதங்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மாற்றும் முயற்சிகளுக்கு தடைக் கல்லாக இருந்தார் என்ற காழ்ப்புணர்ச்சியே காரணம். இது ஹிந்துமதத்தின் மேல் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய மறைமுக தாக்குதல். ஆனால் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் தர்மமே வெல்லும் எனும் வகையில் புடம் போட்ட தங்கம் போல காஞ்சி பெரியவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றமே தெரிவித்துவிட்டது.
  • கும்பகோணம்   மகாமகம் மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எடுத்த பல்வேறு முயற்சிகளை இந்த நேரத்தில் நாம் நினைவு கூர்வது அவசியம். சமீபத்தில் 144 வருடங்கள் கழித்து காவேரி புஷ்கரம்  மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் குறிப்பாக மாயவரத்தில் இந்த காவேரி புஷ்கர நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடப்பதற்கு மிக முக்கியமான காரணம் காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள்தான் என்பது பற்றி ஆன்மிக அன்பர்களுக்கு நன்றாகவே தெரியும்.
  • மிகச் சிறந்த கண் மருத்துவமனை சென்னையில் இயங்குவதைப் பார்த்து ஒரிஸா மாநில முதல்வர்  பிஜு பட்நாயக் காஞ்சி மடத்தை அணுகி, ஒரிஸாவிலும் மிகச் சிறந்த கண் மருத்துவமனையை நிறுவச் செய்திருக்கின்றார். இதற்கு அடிப்படையான காரணம் காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடைய ஒப்பற்ற மருத்துவத்துறை தொண்டு என்றால் அது மிகையாகாது. தமிழ்நாட்டில் மிகச் சிறந்த குழந்தைகள் பாதுகாப்பு மருத்துவமனை (சைல்டு டிரஸ்ட் ஆஸ்பிட்டல்)  இயங்குகின்றது என்றால் அதற்கு அடிப்படையான காரணம் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளே.
  • ஏழை எளிய மாணவர்கள் மிகச் சிறந்த கல்வி பெறுவதற்காக மிகப்பெரிய பல்கலைக் கழகம் காஞ்சிபுரம் அருகே இயங்கிவருகிறது. அதுமட்டுமல்லாது சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைந்த தன்னாட்சிப் பெற்ற கல்லூரியில் 6000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் மதம், இனம், ஜாதி என்ற எந்த வேறுபாடும் இன்றி மிகச் சிறந்த கல்வி பெற்று வருகின்றார்கள். பலருக்கு இங்கே கல்வி கட்டணமே இல்லாமல் இலவசமாக கல்வி வழங்கப்படுகின்றது. இதற்கு அடிப்படையான காரணம் காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களே.
  • இதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் வேத பாடசாலை, முதியோர் இல்லங்கள், தமிழ் வேதங்களான தேவரம், திருவாசகம் போன்ற பன்னிரு திமுறைகளை முறையாக பயிலக்கூடிய பாடசாலைகள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளால் இயங்குகின்றன.
  • அந்தணர் முதல் நந்தனார் வரை எந்த வேறுபாடுமே இல்லாத ஒரு ஹிந்துமத இணக்கம் வேண்டும் என்று எப்போதும் போதித்து அதன் வழியிலேயே செயல்பட்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சித்தி அடைந்தது ஹிந்து மதத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.