கோயில் கட்டிடக்கலை பயணம்

பாரதிய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக கோயில்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. கோயில் கட்டுமானம் என்பது ஒரு புனிதமான செயலாக பாரதத்  துணைகண்டத்தில் மட்டுமில்லாமல், தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியா போன்ற அண்டை நாடுகளிலும் கருதப்பட்டது. எனவே, கோயில் கட்டிடக்கலை, அதன் நுட்பம் பாரதத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு எவ்வாறு பரவியது மற்றும் இந்தக் கலை எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பது சுவாரசியமான ஆய்வாகும். இந்நிலையில், சுதந்திரமடைந்த 75வது வருட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘தேவயத்தனம் – பாரதக் கோயில் கட்டிடக்கலையின் பயணம்’ என்ற இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை பாரதத் தொல்லியல்துறை கர்நாடகாவின் ஹம்பியில் பிப்ரவரி 25, 26 தேதிகளில் நடத்தியது. கோயில்களின் தத்துவ, ஆன்மீக, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்களைப் பற்றி விவாதிப்பதே மாநாட்டின் நோக்கம். மத்திய அமைச்சர்கள் ஜி. கிஷன் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால் அதனை தொடங்கிவைத்து உரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய கிஷன் ரெட்டி, பேலூர் மற்றும் சோம்நாத்பூரில் உள்ள ஹொய்சாள கோயில்களை யூனெஸ்கோவின் சர்வதேச பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசு முன்மொழிந்துள்ளது என்றார். பாரதக் கலை, அறிவு, கலாச்சாரம், ஆன்மீகம், புதுமை, கல்வி ஆகியவற்றின் மையங்களாக கோயில்கள் இருந்து வருகின்றன என்று அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.