கேரள வாகன நிறுத்துமிட கட்டுமான விவகாரம்: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் (கார் பார்க்கிங்) அமைப்பது தொடர்பான வழக்கில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தேக்கடிக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு கேரள அரசு அறிவித்தது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.

இந்த திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், “முல்லை பெரியாறு அணை கட்டுவதற்கான இடத்தை கடந்த 1886-ம் ஆண்டு அக்டோபர் 29-ல்அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா தமிழ்நாட்டுக்கு 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கினார். இந்த இடத்தில் கேரளஅரசு கார் பார்க்கிங் அமைக்க திட்டமிட்டுள்ளது.இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக இரு மாநில அரசுகளும் தங்களது பதிலை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஓ.எஸ். ஓகாஅமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: சர்வே ஆஃப் இந்தியா அமைப்பின் மூலம் கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

அதன் அடிப்படையில் அந்தஅமைப்பு முதலில், திருவிதாங்கூர் மகாராஜா தமிழகத்துக்கு குத்தகைக்கு அளித்ததாக கூறப்படும் பகுதிகளை முழுமையான அளவில்கணக்கிட வேண்டும். அதன் பிறகு, கேரள அரசின் கார் பார்க்கிங் பகுதி குத்தகைக்கு விடப்பட்ட நிலத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்படுகிறதா என்பதையும், எந்த பகுதியில் கட்டுமானம் அமைய உள்ளது என்பதையும் தெளிவாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை 3 மாதத்தில் சமர்ப் பிக்க வேண்டும் இவ்வாறு நீதிபதி ஓகா தனது உத்தரவில் தெரிவித்தார்