குமரியில் சத்ரபதி சிவாஜி சிலை உடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை ஒட்டியுள்ள குளத்தின் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்த சிலைக்கு ஹிந்து அமைப்பினர் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். கடந்த ராம நவமியன்று கூட சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி நள்ளிரவில் சில மர்ம நபர்கள், இங்கு நுழைந்து சத்ரபதி சிவாஜி சிலையின் தலைப் பகுதியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஹிந்து அமைப்பினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். தகவலறிந்து காவல்துறையினரும் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். உடைக்கப்பட்ட சிலையின் தலைப் பகுதியை காவலர்கள் துணியால் மூடிவைத்தனர். சிலையை உடைத்த குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலய தலைவர் நடராஜன் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். அப்பகுதியில் பதட்டமான நிலை நிலவுவதால் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.