கிறிஸ்தவப் பாடசாலைகளுக்கு  நமது பிள்ளைகளை அனுப்பாதீர்!

 

நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே- ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே ப்ரஸ்தாபிக்க விரும்புகிறோம்.

நமது பாடசாலைகளிலே இந்நாட்டுப் புராதன மஹான்களையும் வீரர்களையும் பற்றி சரியான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. நமது வாலிபர்கள் பாடசாலைகளிலே நமது மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங்கொண்டு வளர்கிறார்கள்.

முக்கியமாக கிறிஸ்தவப் பாடசாலைகளிலே இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான ஞானிகளையும் கிருஷ்ணர், ராமர் முதலிய நூற்றுக்கணக்கான அவதார புருஷர்களையும் அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹாவீரர்களைப் பற்றியும் இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை.

நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்தவப் பாடசாலை உபாத்தியாயருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வியாஸ பகவானைப் பற்றி விவரிக்க நேரிட்டது.

அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி, உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட வியாஸனுக்குத் தெரியாதே! பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரிக ஜனங்கள்” என்று கூறினார்.

பூமிர் ப்ராமயதி” என்பதும் – பூமி கோள வடிவில் இருக்கிறது என்பதையும் உலகுக்கு உணர்த்தியவர்களே நம் முன்னோர்கள்தாம்.

பூமி தட்டையாக இருக்கிறது என்பதே கிறிஸ்தவப் பாதிரிகளின் வாதமாக ஒரு காலத்தில் இருந்தது. பூமி கோள வடிவில் – ஸுர்யனைச் சுற்றி வருகிறது என்று சொன்ன விஞ்ஞானி கலிலியோவைக் கொல்ல முயன்றவர்கள் இந்த கிறிஸ்தவப் பாதிரிகள். அப்படியிருக்க நம்மை அஞ்ஞானிகள் – அநாகரிக ஜனங்கள் என்று கூறும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியின் அறியாமையை என்னென்பது?

இந்த கிறிஸ்தவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும் மஹா ஞானிகள் என்று கருதும் செயின்ட் பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரியானவர்களே  என்பதை அந்த கிறிஸ்தவ உபாத்தியாயர் மறந்துவிட்டார்.

இப்படிப்பட்ட  உபாத்தியாயர்களின்  கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் எத்தனை தீமை உண்டாகமாட்டாது? நமது முதலாவது கடமை யாதென்றால் நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மஹாத்மாக்களைப் பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்கு தேச பக்தி, சௌரியம், ஒழுக்கம் முதலியன ஏற்படச் செய்ய வேண்டும். ஆர்யத் தன்மையை பெரும்பாம் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கையென்னும் சேறுகளிலே அமிழ்ந்து கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரி

கள் நமது முன்னோரைப் பற்றி கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று க்ரஹித்துக் கொள்கிறார்கள்.

 ஸ்ரீமது ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும்.

அறியாமை மிகுந்த அந்நியர்கள் எழுதி வைத்திருக்கும் வாய் சரித்திரத்திரங்களைக் (பொய் சரித்திரங்களை) கழற்றியெறிந்துவிட்டு நமது நாட்டின் தேச பக்தியும், நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் செய்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்பட வேண்டும்.

இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களது பாடசாலைகளை விலக்கி வைக்க வேண்டும்.

போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற ஸ்வதேசிய கலாசாலைகளையும் பாடசாலைகளையும் பலப்படுத்த வேண்டும்.

சிவாஜியைப் பற்றி ஸிங்க்ளேர் எழுதியிருக்கும் குளறுபடிகளும், உபநிஷத்துகளைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம சத்ருக்களாக முடிவோம்.

இந்தியா பத்திரிகையில் பாரதியார் எழுதிலிருந்து

(இன்று இதிஹாஸ ஸங்கங்லன் ஸமிதி என்ற அமைப்பு இந்தப் பணியைச் செய்து வருகிறது. தேசிய நோக்கோடு பல வரலாற்று ஆய்வாளர்கள் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். இதனால் ஆர்யதிராவிட இனவாதம் தவிடு பொடியாக்கப்பட்டுவிட்டது)

 

பாசம் பொழிந்த பாட்டி பரமனடி சேர்ந்தார்

ராமநாதபுரம் காந்திமதி அம்பா பாலிகா கல்யாண் கேந்திர குழந்தைகளுக்கு வாய்த்த ஒரு பாட்டி பெயர் செல்லம்மாள். பிஞ்சுகளிடம் அவ்வளவு பாசம் தன் ஓய்வூதியத்தை சேவா காரியங்களிலேயே செலவிடுவது, மற்றவர்களுக்கு சேவை செய்வதிலேயே கவனம் என்று வாழ்ந்தவர். 1992 முதல் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பெண்கள் சேவை மைய அலுவலகப் பொறுப்பாளராகவும் சேவா பாரதி தலைவராகவும் பணி செய்தவர். குழந்தைகளிடம் மட்டுமல்ல, அனைவரிடமும் தாயன்பு பொழிந்தவர். தொண்டுப் பணிகளுடன் பல ஆன்மீகப் பணிகளிலும் முனைந்த செல்லம்மாள், ராஷ்ட்ரீய சேவா பாரதி தேசிய அமைப்பாளர் சுந்தர லட்சுமணனின் பெரியம்மா. அவரால் சேவா பாரதிக்கு அறிமுகமானவர். ஏப்ரல் 2 அன்று செல்லம்மாள் 91 வயதில் இறைவனடி சேர்ந்தார்.