காங். ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பதுகூட குற்றமாக உள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருந்து என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 26) நடைபெற உள்ளது.

இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மதோபூர் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் சிலநாட்களுக்கு முன் கடைக்காரர் ஒருவர் அனுமன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்டார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்களை கேட்பது கூட குற்றமாக உள்ளது. ராஜஸ்தானினும் இத்தகைய பாதிப்பு உள்ளது. ராஜஸ்தானில் முதல்முறையாக இம்முறை ராம நவமிக்கு ஷோபா யாத்திரை ஊர்வலம் நடைபெற்றுள்ளது. மக்கள் ராம்-ராம் என முழக்கமிடும் ராஜஸ்தான் போன்ற ஒரு மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்திருந்தது. மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை உடைத்து தங்களின் சிறப்பு வாக்கு வங்கிக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்க நினைத்தார்கள்.. அதேசமயம் அரசியலமைப்பு சட்டம் இதற்கு முற்றிலும் எதிராக உள்ளது. இடஒதுக்கீடு உரிமையை தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளுக்கு அம்பேத்கர் வழங்கினார். ஆனால் காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்பின.

திருப்திபடுத்துதல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் எப்போதும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக உள்ளது. 2004-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, அவர்கள் முதல் காரியமாக ஆந்திராவில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்தனர். காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் செயல்படுத்த விரும்பிய முன்னோடி திட்டமாக இது இருந்தது. 2004 முதல் 2010 வரை அவர்கள் முஸ்லிம் இடஒதுக்கீட்டை 4 முறை அமல்படுத்த முயன்றனர். ஆனால் சட்டரீதியான தடைகள் மற்றும் உச்ச நீதிமன்ற எச்சரிக்கை காரணமாக அமல்படுத்த முடியவில்லை.

2011-ல் இதை நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்க விரும்பியது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனத் தெரிந்தும் காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.

2006-ல் மன்மோகன் சிங் கூறியது என்ன? – ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசும்போது, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துகளை பறித்து முஸ்லிம்களுக்கு மறுபங்கீடு செய்யும்” என்றார்.

கடந்த 2006-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி இதைக் கூறியிருந்தார். கடந்த 2006 டிசம்பர் 9-ல் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மன்மோகன் சிங் தனது உரையில், “எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெறுவது அவசியம். வளர்ச்சியால் ஏற்படும் பலன்களில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் சமமான பங்கு பெறுவதை உறுதிப்படுத்த புதுமையான திட்டங்களை நாங்கள் தீட்ட உள்ளோம். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்” என்றார்.

மன்மோகன் சிங்கின் இந்த உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து 2006, டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட விளக்கத்தில், “வளங்கள் மீதான முதல் உரிமை என்பது முஸ்லிம்களை மட்டும் குறிப்பிடவில்லை. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரையும் குறிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.