கட்டுக்கதை தவிடுபொடி

ஆர்.எஸ்.எஸ். தான் காந்திஜியைக் கொலை செய்தது என்று ஒரு பொதுக்கூட்டத்தில் ragulபேசினார். இது பொய்யான குற்றச்சாட்டு எனக் கூறி ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். அதற்கு உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டை வாபஸ் வாங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அடுத்த வழக்கு விசாரணையில் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கபில் சிபல் ‘காந்திஜி கொலையை ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் செய்தது என்று ராகுல் காந்தி பேசவே இல்லை’ என்று அந்தர் பல்டி அடித்தார். ஆனாலும் காந்திஜியைக் கொலை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவித்தார். இந்த வாதம் பைத்தியக்காரத்தனமாய் தோன்றுகிறது. வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

காந்திஜி கொலை சம்பந்தமான வழக்கின் தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு நியமித்த நீதிபதி கபூர் கமிஷன் அறிக்கையிலும் காந்திஜி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது நிரூபணம் ஆகியது.

எந்த மத்திய அரசு (காங்கிரஸ்) காந்திஜி கொலை குற்றச் சாட்டை சுமத்தி ஆர்.எஸ்.எஸ்ஸை தடை செய்ததோ அதே மத்திய அரசு தான் ஆர்.எஸ்.எஸ். மீதுள்ள தடையை நீக்கியது.

எல்லாவற்றுக்கும் மேலாக மகாத்மா காந்திஜி ஆர்.எஸ்.எஸ்ஸின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் பணிகளைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

தேசியம் பேசி காந்திஜி வளர்த்த காங்கிரஸ் இன்று இத்தாலி சோனியாவிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தனது காலைப் பிரார்த்தனையில்  மகாத்மா காந்திஜியின் பெயரை தினசரி நினைவுகூறுகிறது.

இன்று ஆர்.எஸ்.எஸ். 54,000 ஊர்களில் கிளை பரப்பி, லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் தேசபக்தி, கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்ற விழுமிய பண்புகளை உருவாக்கி வெற்றி நடை போட்டு வருகிறது. கயவர்களின் கட்டுக்கதைகள் தவிடுபொடியாகிவிட்டது.