எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மானியத்துடன் கடன்; வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

18 முதல் 55 வயது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தொழில்முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவாகனங்கள் மூலமாக காய்கறி விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல்55 வயது வரையிலும், குடும்பஆண்டு வருமானம், ரூ.3,00,000 மிகாமலும் இருக்க வேண்டும். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். வாகனங்கள் மூலம் காய்கறி விற்கும் தொழிலுக்கு திட்ட தொகையாக ரூ.3,24,000 கடன் வழங்கப்படும். இதில் ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் மானியமும், பழங்குடியினருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

எஞ்சிய தொகை வங்கி கடன் தொகையாக பெற வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தில் பயன்பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது