இந்திய கடற்படையின் 26-வது தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்பு: தாயின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்

கடற்படை புதிய தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நேற்று பொறுப்பேற்றார். அதற்கு முன் அவர் தனது தாயின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் ஹரி குமார் நேற்று ஓய்வு பெற்றார். இதனால் கடற்படையின் துணை தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். அவர் டெல்லி சவுத் பிளாக்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படையின் 26-வது தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவரது தாயார் ரஜினி திரிபாதி உட்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டார். பதவி ஏற்கும் முன்பாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, தனது தாயின் பாதம் தொட்டு ஆசி பெற்றார்.

அட்மிரல் தினேஷ் குமார் கடந்தகடந்த 1985-ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்தார். கடற்படையின் மேற்கு மண்டல தலைமை அதிகாரியாகவும், இந்திய போர்க் கப்பல்கள் வினாஷ், கிர்ச், திரிசூல் ஆகியவற்றின் தலைமை அதிகாரியாகவும் அட்மிரல் தினேஷ் குமார் பணியாற்றியுள்ளார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, அமெரிக்காவில் உள்ள கடற்படை கல்லூரி ஆகியவற்றிலும் இவர் பயிற்சி பெற்றுள்ளார். கடற்படையில் இவர் ஆற்றிய சேவைக்காக அதி விஷிஸ்ட் சேவா பதக்கம், நவ் சேனா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. புதிய தளபதியாக பொறுப்பேற்றபின் தினேஷ் குமார் திரிபாதி அளித்த பேட்டி: நமது கடற்படை இத்தனை ஆண்டுகளாக போருக்கு தயார்நிலையிலும், நம்பகத்தன்மையுடனும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் சேவையாற்றியுள்ளது. கடல்சார் துறையில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு எப்போதும் இந்திய கடற்படை போருக்கு தயார் நிலையில் இருக்கும்.

இதில் மட்டுமே எனது கவனம் இருக்கும். புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கும், வளர்ந்த இந்தியாவாக மாறுவதற்கும், கடற்படையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் தற்சார்பு இந்தியா நடவடிக்கைகளை நான் வலுப்படுத்துவேன். இவ்வாறு திரிபாதி கூறினார்.