இது ஒரு கேள்வியாம்? தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றால்தான் தேசபக்தியா?

கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபன் மிஸ்ரா, அமிதாப் ராய் அடங்கிய பெஞ்ச் பாரத அரசுக்கு எதிராடக ஷ்யாம் நாராயணன் சௌக்கே தொகுத்த வழக்கில், இனி திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்திருக்கிறது!

இத்தீர்ப்புக்கு பெரும் ஆதரவும் எப்போதும் போல ஒரு குரூப் எதிர்த்தும் அறிக்கை, விவாதங்கள்! ஆதரவு தெரிவிப்போரை விட்டுவிடுவோம். எதிர்ப்பாளர்கள் சொல்வதெல்லாம் இன்றைய இளைஞர்களிடம் எப்படி எடுபடும் என்று தெரியவில்லை.

  1. தேசிய கீதம் பாடும்போது எழுந்து நின்றால்தான் தேசபக்தியா? 2. பாடல் இசைக்கப்படும் போது சேர்ந்து பாடாவிட்டால் அது தேசத் துரோகமா? 3. பாடலில் கலந்துகொள்ளாமல் பாடும் போது எழுந்து நடந்தால் அது அவமதிப்பாகுமா? 4. மோடி அரசு ஏன்வேண்டாத வேலையை செய்கிறது? இத்தனை நாள் எங்கேயோ கிடந்த ஜன கண மன”வை தியேட்டருக்கு கொண்டுவந்து ஏன் எங்கள் ‘தனி உரிமையை’ பறிக்கிறார்கள்.

முதலில் இவர்களுக்குப் புரியும்படியான ஒரே ஒரு உதாரணத்தை சொல்லி விடுகிறேன்?

நவம்பர் 10 அன்று அமெரிக்கா மாகாண மாசசெஸ்ட் கல்லூரி ஒன்றில் தேர்தல் தகராறில் அமெரிக்காவின் தேசியக் கொடி எரிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட டோனால்ட் டிரம்ப், தேசியக்கொடியை எரித்தால் ஓராண்டு ஜெயில் அல்லது தேசிய குடியுரிமையை இழக்கும் தண்டனை உண்டு எனக்கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் கூறியது ஏன் அதிசயமானது? அமெரிக்காவில் இதுவரை தேசியக் கொடியை எரிப்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை. அது தேசியக் கொடியை அவமதிப்பது ஆகாது. அதாவது அது தனிமனித உரிமை! இப்படித்தான் அமெரிக்காவின் தந்தை ஜார்ஜ் வாஷிங்டன் கூட கூறியுள்ளார். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் தேசியக்கொடியைக் கூட உள்ளாடையாக, கோவணமாக கட்டிய அமெரிக்கர்கள் இன்று மாறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி காலத்தில் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடப்பட்டு எழுந்து நின்ற மக்கள், இன்று மோடி காலத்தில் அவருக்கே இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுப்பது விதண்டாவாதம் தானே?

நீதிமன்றம் தனது தீர்ப்பில் விதண்டாவாதிகளின் எல்லா சந்தேகத்துக்கும் விளக்கம் அளித்துள்ளது!

தாயை, தாய்நாட்டை, தாய்மொழியை, தாய் மதத்தை மதிக்காதவன் மனிதன் என்றால் அதை ஏற்க வேண்டுமா? நமது முன்னோர்கள் உருவாக்கிய தேசியக் கொடி, தேசிய கீதம் இவற்றை சட்டம் போட்டுத்தான் காப்பாற்ற வேண்டும் என்பதும் தண்டனைக்கு பயந்து மரியாதை தரவேண்டும் என்பதும் சரியா? நாம் இந்நாட்டின் குடிமகன் எனச் சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வேண்டும்.

தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்போம்- சேர்ந்து பாடுவோம்- மரியாதை செலுத்துவோம். அதுவே இந்தியனாக இருப்பதற்கான தகுதி.