ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின்  அனுபவங்கள்: மக்களை மீட்டு, நிவாரணம் அளித்தபோது…

* சுசீந்திரம் ஊருக்குள் தண்ணீர் ஏறி வந்த சமயத்தில் ஒரு வீட்டுக்குள் ஜன்னல் மட்டம் வரை தண்ணீர் ஏறி வந்ததை பார்த்து ஸ்வயம்சேவகர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.  கழுத்து அளவு தண்ணீர் இருந்த அந்த வீட்டிற்குள் இருந்த மூதாட்டி கட்டில் மேல் ஒரு ஸ்டூலைப் போட்டு அதன் மேல் ஒரு ஸ்டுலை போட்டு உட்கார்ந்து இருந்தார்.  அவரின் நெஞ்சளவு  தண்ணீர் பாந்து கொண்டிருந்தது.  அவரை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு இரண்டு ஸ்வயம்சேவகர்கள் தூக்கி சென்றனர்.

*சுசீந்திரம்  கொசாலை அருகே ஒரு பெண்மணியை தண்ணீர் ஏறிய வீட்டிற்குள் இருந்து மீட்டு கொண்டு அவர் தன் கழுத்தை ஒரு துணியால் தன் செயினுக்கு பாதுகாப்பாக சுற்றிக் கொண்டதும், கைகளால் தன் கம்மல்களை மூடிக் கொண்டதையும் கண்டு நம் ஸ்வயம்சேவகர்கள் நாங்கள் உங்களுக்கு உதவ வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்காரர்கள் என்று சொன்னபின் சிரித்து விட்டு தைரியமாக நடந்து வந்த விவரத்தை ஸ்வயம்சேவகர்கள் மகிழ்ச்சியுடன் பின்னர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர்.

* பரப்புவிளை ஊரில் ஒரு வீட்டுக்குள் இருந்து அபயக்குரல் கேட்கவே வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது முட்டளவு மேல் தண்ணீர் இருந்த அந்த வீட்டுக்குள் ஒரு பெண்மணி கதவின் பூட்டு ஜாம் ஆகிவிட்டது. அதனால் வெளியே வரமுடியவில்லை என்று குரல் கொடுத்தார்.   உடன் வந்திருந்த ஆசாரி வேலை தெரிந்த ஒரு ஸ்வயம்சேவகரை அழைத்து கையில் கிடைத்த உபகரணங்களை வைத்து பூட்டை நெம்பி திறந்து அந்த பெண்மணியை விடுவித்த போது கிறிஸ்தவரான அந்த பெண்மணி ஏசப்பாவாக வந்து என்னைக் காப்பாற்றினா என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டார்.

இதே பகுதியில் தனியாக வீட்டில் மாட்டிக் கொண்ட வயதான தாயாரை காப்பாற்றுங்கள் என்று ஒரு பெண்மணி கதறியபடியே காவல்துறை அதிகாரியிடம் கூறினார்.  அவர் உடனே, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம்.  அவர்கள் வருவார்கள் என்று கூறி தன் ஓட்டுனருடன் காரிலேயே உட்கார்ந்திருந்தார்.  அந்த நேரத்தில் அங்கிருந்த ஸ்வயம்சேவகர்கள் அந்த அதிகாரியிடம் வாருங்கள் நாம் போவோம் என்று அழைத்த போது யாரும் செல்லக் கூடாது தீயணைப்பு துறை ஆட்கள் வரட்டும் என்று உத்தரவிட்டார்.  அதற்குள் கயிறுகளுடன் வந்த நம் ஸ்வயம்சேவகர்கள் கயிறுகளை கட்டி தண்ணீரில் நீந்தி சென்று அந்த வீட்டை அடைந்து அந்த மூதாட்டியை தூக்கி பத்திரமாக கொண்டு வந்தனர்.  இதை ஆச்சரியத்துடன் அந்த அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார்.  தீயணைப்பு துறையினர் அதுவரை வந்து சேரவே இல்லை.  அந்த அதிகாரி நீங்கள் நன்றாக வேலை செகிறீர்கள். ஆனால் உங்களிடம் கட்டுபாடு இல்லையே என்று கூறினார். ஏனென்று கேட்டதற்கு என் உத்தரவை மீறி சென்றிருக்க கூடாது அல்லவா என்று பதில் சொன்னார்.  அதற்கு ஸ்வயம்சேவகர்கள் யார் அவதிப்பட்டாலும் காப்பாற்ற வேண்டும் எங்களுக்கு சங்க பெரியவர்கள் ஏற்கனவே உத்தரவு கொடுத்துள்ளனர்.  அங்கு செல்ல கூடாது என்ற தங்கள் உத்தரவு எங்களை கட்டுபடுத்தாததற்கு காரணம் அதுதான் என்று கூறி விட்டு வந்தனர். மீட்புப் பணியில் இருந்த போது சுசீந்திரம் பகுதியை சார்ந்த ஆர்.ஆர். முருகேஷ், விசு என்ற இரண்டு ஸ்வயம்சேவகர்கள் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டனர்.  அவர்களை நோக்கி உடனே கயிறுகளை வீசி எறிந்ததால் அதை பிடித்து இருவரும் பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தார்கள். மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.