ஆர்.எஸ்.எஸ்ஸிலாவது, தீண்டாமையாவது?

அகில இந்திய காங்கிலிஸ் தலைவர் பதவி என்பது பெரிய பெரிய ஜாம்பவான்கள் வகித்த பதவியாகும். அந்த பதவிக்கு நேரு குடும்பத்தின் வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக ராகுல் நியமிக்கப்பட்டார். அவரின் பேச்சுகள் அவர் வகிக்கும் பதவிக்கு சிறிதும் தகுதி இல்லாதவர் என்பதைக் காட்டுகிறது.

தலித்துகளின் அவலநிலைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜகவே காரணம் என்றும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் மரபணு சமூகத்தில் தலித்துகளை தொடர்ந்து தரம் தாழ்த்தி வைத்திருக்கவே நினைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம். ராகுல் என்ன பெரிய ‘மரபணு’ ஆராய்ச்சி நிபுணரா? அவரே நூறு சதவீதம் சுதேசி இல்லையே.

எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி  தலித்துகள் நடத்திய போராட்டத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் என்ன சம்பந்தம்? போராட்டம் செய்யும் இவர்கள் எல்லாம் தலித் நல விரும்பிகள் இல்லை. இவர்கள் சந்தர்ப்பவாதிகள். தேர்தல் கண்ணோட்டத்தில் தலித் வாக்கு வங்கிக்காக கபட நாடகம் ஆடி வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தீண்டாமையை ஏற்றுக் கொள்ளாத இயக்கம். கோயில், குளம், மயானம் மூன்றும் ஹிந்துக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுதியான கருத்து. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஜாதி பார்ப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. ஹிந்து ஒற்றுமை ஒன்றே ஆர்.எஸ்.எஸ்ஸின் தாரக மந்திரம்.

ராகுல் அவர்களே! நீங்கள் அகில பாரத தலைவர் என்பதை மறந்து விட்டு, நாலாந்தர பேச்சாளர் போன்று செயல்பட வேண்டாம்!