ஆதீனத்தின் அறிவுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், ‘நமது முன்னோர்கள் தினமும் கோயில்களுக்குச் சென்று தங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருந்தனர். அதேபோல நாமும் தினமும் கோயிலுக்குச் சென்று உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் மக்கள் தினமும் அலைபேசிக்கு சார்ஜ் ஏற்றுகின்றனர். உடலுக்கு சார்ஜ் ஏற்ற கோயிலுக்கு செல்வதில்லை. நாம் வாங்கும் பொருட்களுக்கு கியாரண்டி உண்டு. ஆனால், மனித உடலுக்கு நிரந்தரம் ஏதுமில்லை. ஆகவே நாம் இருக்கின்ற காலத்தில் நல்லதை செய்ய வேண்டும். உடலை அழகுபடுத்த நேரம் ஒதுக்கும் மக்கள், இறை வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குவது இல்லை. தமிழகத்தில் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை கிராமங்களில்தான் உள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், குத்தகைக்கு எடுத்து வாடகை கொடுக்காதவர்கள், கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள். இல்லையெனில், அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ, பெருச்சாளியாகவோ, மூஞ்சூறுவாகவோ பிறக்க நேரிடும். அதைப்போல சிவன் சொத்து குலநாசம் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்’ என பேசினார்.