ஆட்சிக்குத் தேவை அறம்

தேசத்தை வழிநடத்த நேர்மையும் துணிவும் நிர்வாகத் திறனும் அபாரமான தேசபக்தியும் உள்ளவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வரும் இந்த வேளையில் வால்மீகிக்கு நன்றி கூறி இந்தப் பண்புப் பட்டியலை ஒருமுறை படித்துப் பார்ப்போம்.

  •   இறைவனை வழிபாட்டினாலும் தாய் தந்தையரை அவர்களின் சொற்படி நடப்பதாலும் சேவை செய்வதாலும் குருமார்களை அவர்களின் கட்டளையை நிறைவேற்றுவதாலும், சான்றோருக்கு வேண்டிய செல்வத்தைக் கொடுப்பதாலும் வயதிலும் அறிவிலும் நல்வாழ்க்கையிலும் உயர்ந்தவர்களை வணங்குவதாலும் அறிஞர் களையும் நல்லோரையும் பரிசளிப்பதாலும் திருப்தி செய்கிறாயா?
  •   உன் மந்திரிகள் அறிவாளிகளாக, நீதி நிபுணர்களாக, பிறரது எண்ண ஓட்டத்தைக் கிரகிக்கும் (அறியும்) சக்தி பெற்றவர்களாக, நம்பத்தகுந்தவர்களாக இருக்கிறார்களா?
  • நீ செய்யும் ஆலோசனை அந்தக் காரியம் முடிவதற்குமுன் வெளியில் தெரியாமல் இருக்கிறதா?
  • எளிய வழிகளால் உயர்ந்த பயன் கிடைக்கக் கூடிய காரியங்களை ஆலோசித்து தாமதம் இல்லாமல் செய்து முடிக்கிறாயா?
  •  உன் தூதர்கள் உன் நாட்டில் பிறந்தவர்களாக, பிறருடைய எண்ண ஓட்டத்தைக் கிரகிக்கும் சக்தி வாய்ந்தவர்களாக, செயல்திறன் பெற்ற வர்களாக, சமயோசிதமாகவும் தயங்காமலும் பதில் சொல்பவர்களாக, நீ சொல்லி அனுப்பிய செய்தியையும் பதிலையும் மாற்றாமல், தவறாமல் சொல்பவர்களாக, பகுத்தறியும் சக்தி படைத்தவர்களாக உள்ளார்களா?
  • உன் நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, திரும்பி வந்திருக்கின்ற எதிரிகளை பலமற்றவர்கள் என்று அலட்சியம் செய்யாமல் இருக்கிறாயா? ஏதாவது தகுந்த காரணம் இல்லாமல் அவர்கள் திரும்பி வரமாட்டார்கள். எனவே அவர்களை எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
  • நீதி நிபுணர்களான, தகுதி வாய்ந்த மூன்று நான்கு மந்திரிகளுடன் முதலிலும் பிறகு அவர்களுடன் தனித்தனியாகவும் ஆலோசனை செய்கிறாயா?
  • வீரர்கள், உத்தம குணம் பெற்றவர்கள் போன்றோருக்கு அவர்களைச் சோதித்து வெகுமதிகள் கொடுத்து கௌரவிக்கிறாயா?
  • போர் வீரர்களுக்கு உரிய காலத்தில் சம்பளத்தையும் உணவையும் அவர்களின் வேலைக்குத் தகுந்தபடி தாமதமில்லாமல் கொடுத்து வருகிறாயா?
  • திருடன் கையும் களவுமாக பிடிபட்டு, விசாரித்தபின் தான் திருடியதைத் திருப்பிக் கொடுத்துவிட ஒப்புக்கொண்டால், அதை அநியாயமாக வாங்கிக்கொண்டு தண்டனை இல்லாமல் விடப்பட்டிருக்கிறானா?
  • பணக்காரனுக்கும் ஏழைக்கும் வழக்கு வந்தால் உன் நீதிபதிகள் பணக்காரனிடமிருந்து பணம் பெற உத்தேசிக்காமல் தீர்ப்பு சொல்கிறார் களா?
  • உன் நாட்டில் உள்ள நல்லவர்களும், பட்டணத்தில் வசிப்பவர்களும், கிராமத்தில் வசிப்பவர்களும் நீ நன்றாக இருக்க வேண்டும் என்று எப்போதும் பிரார்த்திக்கிறார்களா?

ஸ்ரீ ராமன் தன்னைச் சந்திக்க வந்த பரதனுக்கு  வழங்கிய அறிவுரை.