ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்துவது கண்டிக்கத்தக்கது

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2012 முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியராக, 12,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களை, ‘ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம்’ என்று, வாக்குறுதி கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இரண்டரை ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசிரியர்கள் பல முறை கோரிக்கை வைத்தும், பொய்யான நம்பிக்கை கொடுத்து வந்த தி.மு.க., தற்போது அற வழியில் போராடிய அவர்களை, சமூக விரோதிகளை போல் அத்துமீறி கைது செய்திருக்கிறது.

ஓட்டளித்த மக்களை வஞ்சிப்பது தி.மு.க.,வுக்கு புதிதல்ல. நாட்டின் எதிர்காலமான மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்துவது கண்டிக்கத்தக்கது. வீண் விளம்பரத்திற்கு சிலை வைக்கிறோம், பூங்கா கட்டுகிறோம் என்று கடன் மேல் கடன் வாங்கி, மக்களை கடன்காரர்களாக்கி இருக்கும் தி.மு.க., ஆசிரியர்களை அவல நிலையில் தள்ளி இருக்கிறது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து, நிறைவேற்ற முன்வர வேண்டும்.