அயோத்தி ஸ்ரீராமர் கோயில் பணி

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுமானப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுவதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர’ அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய், “இந்த கூட்டத்தில் 15 அறக்கட்டளை உறுப்பினர்களில் 14 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கோயில் வளாகத்தில் ராமாயண காலத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய ஹிந்து சமயப் பெரியோர்களின் சிலைகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, அறக்கட்டளையின் விதிகள் மற்றும் துணை விதிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டுவதற்கு மட்டும் ரூ.1,800 கோடி செலவாகும் என அறக்கட்டளை மதிப்பிட்டுள்ளது. 2023 டிசம்பரில் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். 2024 ஜனவரியில் மகர சங்கராந்தி பண்டிகையின்போது ஸ்ரீராமர் கருவறையில் அமர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.