அமெரிக்காவில் ஹிந்து சமய கல்வி

இந்து சமூக நிறுவனம் (HCI) மற்றும் மோத்வானி ஜடேஜா அறக்கட்டளை (MJF) ஆகியவை இணைந்து அமெரிக்காவில் “பல்கலைக் கழக ஹிந்து சமய கல்வி என்ற புதிய பெல்லோஷிப் பாடதிட்டத்தை அறிவித்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் பல்கலைக் கழகங்களில் ஹிந்து மதம் குறித்த பாடங்கள், வேதபாடங்கள் படிக்க பதிவுசெய்யும் மாணவர்கள், பொருத்தமான பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு கல்வி நிதியுதவியும் வழங்கப்படும்.

‘இந்த முதல் வகையான கூட்டுறவுத் திட்டம், ஹிந்து பாரம்பரியத்தை பின்பற்றும் மக்களுக்கு புரோஹிதம் போன்ற அறிவு சார்ந்த ஆன்மீக உதவிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இக்கல்வி அந்த தேவையை பூர்த்தி செய்யும். அமெரிக்காவில் பிறந்து வளரும் ஹிந்து குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு மதம் சார்ந்த வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. பல்கலைக் கழகத்தின் இந்த பயிற்சிக்கு சமூகம் ஆதரவளிப்பது அவசியம். இந்த பாடத்திட்டத்தை முதலில் ஸ்டான்போர்ட் மற்றும் யு.சி பெர்க்லி பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்தப்படும்’ என்று ஹிந்து சமூக நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கைலாஷ் ஜோஷி தெரிவித்தார்.

ஆன்மீக இயக்குநர்கள் இன்டர்நேஷனல் (SDI) தலைவர், ரெவ். அனில் சிங் மொலரெஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த திட்டம் ஒரு முக்கியமான, அவசியமான வெற்றிடத்தை நிரப்புகிறது. ஹிந்து பாரம்பரியத்தின் செல்வங்களை வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் தேவைப்படும் பிற இடங்களில் வழங்க அனுமதிக்கிறது’ என்றார்.

ஓக்லஹோமா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் புகழ்பெற்ற வேத அறிஞரும் கணினி விஞ்ஞானியுமான பேராசிரியர் சுபாஷ் காக். ‘நான் முழு மனதுடன் பல்கலைக் கழக வளாகங்களில் ஹிந்து சமய கல்வி என்ற பார்வையை ஆதரிக்கிறேன். இது நிச்சயமாக அமெரிக்காவில் தேவை. மேலும், இது மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும்’ என தெரிவித்தார்.

கிராஜுவேட் தியாலஜிகல் யூனியன் இயக்குநர் டாக்டர் கமல் அபு ஷம்சீஹ், ‘பட்டதாரி இறையியல் ஒன்றியத்தில் (ஜிடியு) உள்ள சர்வமத வழிபாட்டுத் திட்டம் (ஐசிபி) அனைத்து மரபுகளைச் சேர்ந்த அறிஞர்களையும் வரவேற்கிறது. எச்.சி.ஐ மற்றும் எம்.ஜே.எஃப் வழங்கும் தனித்துவமான பல்கலைக் கழக பாடதிட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறது’ என கூறினார்.