அமித் ஷா போலி வீடியோ விவகாரம்: தெலங்கானா காங்கிரஸாருக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 23-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, பாஜக ஆட்சிக்கு வந்ததும், சட்டத்திற்கு புறம்பாக தெலங்கானாவில் உள்ள முஸ்லிம் இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்றும், அதற்கு பதில், எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்குவோம் என்று பேசினார்.
ஆனால், சிலர் இதனை மார்பிங் செய்து, எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என அமித் ஷா கூறியதாக போலி வீடியோக்களை வெளியிட்டனர். இந்த போலி வீடியோவை தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து டெல்லி போலீஸார் கடந்த ஞாயிறன்று வழக்குப் பதிவு செய்தனர். அந்த வீடியோ மார்பிங் செய்தவர்கள் குறித்து நேரில் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் நேற்று ஹைதராபாத்துக்கு வந்தனர். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகளான அஸ்லாம் தஸ்மீன், சதீஷ், நவீன் மற்றும் சிவக்குமார் ஆகியோருக்கு நோட்டீஸ்களை வழங்கினர்.
மேலும், சமூக வலைதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்ட தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரேவந்த் ரெட்டிக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினர். வரும் மே மாதம் 1-ம் தேதி தங்களது செல்போனுடன் விசாரணைக்கு அனைவரும் ஆஜராக வேண்டுமென டெல்லி போலீஸார் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.