அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு; ராகுல் உ.பி., நீதிமன்றத்தில் ஆஜர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்., எம்.பி ராகுல் உ.பி., மாநிலம் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். தொடர்ந்து அவர் ஜாமின் பெற்றார்.
கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜ., மூத்த தலைவராக இருந்த அமித்ஷா குறித்து ஆட்சேபிக்கத்தக்க கருத்தை காங். எம்.பி. ராகுல் பேசியதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான புகார் தொடர்பாக விசாரிக்கும் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நேரில் ஆஜர் ஆகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, அவதூறு வழக்கில் இன்று (பிப்.,20) காங்.,எம்.பி ராகுல் ஆஜர் ஆனார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த வரும் பாரத் ஒற்றுமை யாத்திரையை ராகுல் ஒத்திவைத்துள்ளார். சுல்தான்பூரில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.