அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவருக்கு தொடர்புடைய இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.10 லட்சம்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.11.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இப்பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததா எனவும் விசாரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 28-ம் தேதி (நேற்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கதிர் ஆனந்துக்கு அண்மையில் அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.