அதிபர் தப்பியோட்டம்

இலங்கையில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அங்கு மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக போராட்டம் நடத்தினர். இதனால், அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சே, அமைச்சராக இருந்த அவரது மகன், குடும்பத்தினர் என பலரும் பதவி விலகி தப்பியோடினர். அதிபர் கோத்தபயா மட்டும் பதவி விலக மறுத்தார். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். ஆனால், பொருளாதார நெருக்கடி தீராமல் தொடர்வதால் கோத்தபயாவும் பதவி விலக கோரிக்கை வைக்கப்பட்டது, போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் தலைநகர் கொழும்புவில் ஒன்றுகூடி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அவர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். எனினும், அதனைமீறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பிவிட்டார். ஆனால், அங்கிருந்த ரஜிதா சேனரத்னா என்ற எம்.பியை போராட்டக்காரர்கள் தாக்கினர். அதில் அவர் படுகாயமடைந்தார். கோத்தபய எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகிவில்லை.