அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துகளை குவிக்கும் திமுக அமைச்சர்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, திமுக அமைச்சர்கள் சொத்துகளை குவித்து வருகின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்திய அரசின் நிதியுதவியுடன், இலங்கையில் மலையகத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, 10 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தவும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மூலம், இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. திமுக அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையை ஏற்கெனவே நடத்தி இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது குறித்து, தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.