வட கிழக்கு மாநிலங்களுக்கான 371 சிறப்பு சட்டம் நீக்கம் இல்லை

இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியானபின் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து நேற்று மாலையில் ஆய்வு செய்தார். (திங்கட்கிழமை) காலையில் காமாக்யா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தும் அவர், பின்னர் பா.ஜனதா தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.வடகிழக்கு கவுன்சிலின் 68-வது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது இது அவர் கூறியதாவது:-

அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், 371-வது பிரிவும் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொள்ள முயன்று வருகின்றன. ஆனால் இங்கே நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது, அரசியல் சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக நடவடிக்கைதான். இதைத்தான் நாடாளுமன்றத்திலும் நான் அப்போது கூறினேன்.ஆனால் 371-வது பிரிவு ஒரு சிறப்பு வழிமுறை ஆகும். இரண்டு பிரிவுக்கும் இடையேயான அடிப்படை வித்தியாசமே இதுதான். எனவே 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது போல, 371-வது பிரிவும் ரத்து செய்யப்படாது. 371-வது பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள 371 (ஏ) முதல் 371 (ஜே) வரையிலான அனைத்து பிரிவுகளையும் மோடி அரசு மதிக்கிறது. அவை சேதப்படுத்தப்படாது.

இதனால் வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து பாதிக்கப்படாது. இவ்வாறு அமித்ஷா கூறினார்