பாடம் தரும் அம்பானிகள்

வாழ்வில் முன்னேற, முன்னேறிய பலரது வாழ்க்கை வரலாறு நமக்கு ஒரு தூண்டுகோல். சாதாரண மனிதராக இருந்து பாரதத்தின் வியாபார சக்கரவர்த்தியாக உயர்ந்த திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமும், திரைப்படமும் அதிகளவில் வரவேற்பை பெற்றது.

அவரது இளைய மகன் அனில் அம்பானி, 2008-ல் மூன்று லட்சம் கோடிகளுடன் உலகின் ஆறாவது பணக் காரர். ஆனால் இன்று, பன்னிரண்டே வருடங்களில் அனைத்தையும் இழந்து, பல்லாயிரம் கோடி கடன், தனக்கென ஒரு ரூபாய் கூட சொத்து இல்லை. மிக எளிமையான ஆன்மீக வாழ்வையே வாழ்கிறேன் என நீதி மன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் அளவுக்கு தற்போது அவரது வாழ்வு தலைகீழாகிவிட்டது.

அவரின் சில முடிவுகள், வரம்பு மீறிய அகலக்கால், தொலைதொடர்பு துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், மாற்றத்திற்கேற்ப மாறமுடியாத சூழல் என பல்வேறு காரணங்களால் அவரது நிறுவனங்கள் சில மூடப்பட்டன, பல விற்கப்பட்டன ஆயினும் கடன் சுமை தீரவில்லை.

இளைஞர்களுக்கு திருபாய் அம்பானி ஒரு பாடம் என்றால், துணிச்சல், துணிச்சலின் எல்லை, அர்பணிப்பு, இடர்களை எதிர்கொள்ளல், சேமிப்பு, வருவாய்க்கு தகுந்த செலவு, முதலீடுகளில் கவனம், எதிர்கால திட்டமிடல், கால சூழலுக்கு ஏற்ப மாற்றம், தொலைநோக்கு பார்வை, அனுபவ பாடம் குறித்து அவரது மகனும் நமக்கு ஒரு பாடம்.

யானைக்கே அடி சறுக்கினால், பூனைக்கு? எனவே இருவரது வாழ்க்கையும், நமக்கு இருவேறு பாடங்கள். இதை உணர்வோம். நாமும் நம் வாழ்க்கையில் தெளிவான முடிவுகள் எடுப்போம், திட்டமிட்டு வாழ்வோம்.