பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

பர்மிங்காமில் அண்மையில் முடிவடைந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில், பதக்கங்களை வென்ற ஆயுதப் படையைச்சேர்ந்த வீரர்களுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் கலந்துரையாடினார். கடந்த மாதம் 28ம் தேதி முதல் இம்மாதம் 8ம் தேதிவரை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட முப்படைகளையும் சேர்ந்த 31 பேரில் 15 வீரர்கள், 6 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். பதக்கம் வென்றவர்களை பாராட்டிய ராஜ்நாத்சிங் வருங்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர் சௌத்ரி, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரிக்குமார், பாதுகாப்புத்துறை  செயலர் டாக்டர் அஜ்யகுமார், ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.