ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்

நீட் தேர்வில் கிராமத்து விவசாயியின் மகள் தேர்ச்சி பெற்றும் மருத்துவம் கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லாததால் மாவட்ட ஆட்சியர் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இரும்பேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகராஜனின் மகள் தீபா சென்ற மாதம் எழுதிய மருத்துவத்தேர்வான நீட் தேர்வில் 564 மதிப்பெண் பெற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்விக்கட்டணம், விடுதியில் தங்கிப் படிக்க கட்டணம் கட்ட வசதியில்லாததால் மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனு அளித்தார். தீபாவின் நிலையை அறிந்த ஆட்சியர் கந்தசாமி தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் தொகையை நேரில் சென்று வழங்கினார். மேலும், மருத்துவம் படிப்பதற்கான செலவை முழுமையாக ஏற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.