ஊரகம், தேசியத்துக்கு ஊட்டமே

நடக்குமா நடக்காதா என்று பல நாட்களாக விவாதித்து வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒரு வழியாக முடிந்து, தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக கூட்டணியினர் அடுத்து தமிழகத்தில் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று மார்தட்டி வந்தார்கள்.

தேர்தலில் முஸ்லிம்களுடைய ஓட்டுக்களைப் பெற வேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து முஸ்லீம்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டிவிட்டார்கள். இவ்வளவுக்குப் பிறகும் திமுக எதிர்பார்த்தது போன்று தேர்தல் முடிவுகள் வரவில்லை. திமுகவை நெருங்கி அதிமுக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 13 மாவட்ட தலைவர் பதவியிடங்களைக் கைப்பற்றியுள்ளனர். ‘அதிமுக பலவீனமாகிவிட்டது, இனி நாங்கள்தான் எல்லாம்’ என்ற திமுகவின் கனவு தவிடுபொடியாகிவிட்டது.

அடேயப்பா… சீமான் பேசிய பேச்சென்ன? அவரது பேச்சைக் கேட்க இளைஞர்கள் சிலர் கூடினர் என்பது உண்மைதான். ஆனால் பொறுப்புள்ள மக்கள் சீமானை சீந்தவில்லை, அவர் கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை.

திருமா, வைகோ, கம்யூனிஸ்டு கட்சிகளைவிட பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைவிட பாமக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுக கூட்டணிக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். இப்போதிருந்தே திட்டமிட்ட ரீதியில் வேலை செய்துவந்தால் மீண்டும் அதிமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும். ஒருவேளை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தேச விரோதிகளின் கூடாரமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

ஹிந்து விரோத, தேசவிரோத, பிரிவினைவாத சக்திகளை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழித்துக்கட்டுவது நாட்டு நலனுக்கு அவசியம்.