வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

முன்னொரு காலத்தில் ஒட்டகம் மேய்க்கும் ஒருவன் இருந்தான். வழக்கம்போல அவன் தன் ஒட்டகங்களை மேய்த்து ஒட்டக கூடாரத்தில் கொண்டு போய் கட்டி விட்டு வந்தான். வாழ்க்கையில் தனக்கு இருக்கும் பிரச்சனைகள் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தான். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று யோசித்தவாரே சாலையோரத்தில் நடந்து கொண்டு இருந்தான்.

அப்பொழுது வழியில் ஒரு முனிவரைக் கண்டான். அவரிடம் முனிவரே, மற்றவர்களுக்கு வாழ்க்கையில்தான் பிரச்சனை இருக்கும். ஆனால் எனக்கு வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கிறது. என்ன செய்வது? என்று கேட்டான். முனிவர், அவனைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட பிறகு, ‘இன்று இரவு கூடாரத்திற்கு படுக்க செல்லும் முன் அங்கு கட்டப்பட்டுள்ள ஒட்டகங்களை பார். ஒட்டகங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் படுத்த பின்னரே நீ உறங்க வேண்டும். அதுவரை விழித்துக் கொண்டு இரு’ என்று கூறி வழியனுப்பினார்.

இரவு கூடாரத்திற்கு சென்ற அவன், ஒட்டகங்களை பார்த்தான். சில ஒட்டகங்கள் தானாகவே படுத்துவிட்டன. சில ஒட்டகங்களை அவன் கட்டாயப்படுத்தி படுக்க வைத்தான். ஆனால் ஒரு ஒட்டகத்தை படுக்க வைப்பதற்குள், இன்னொன்று எழுந்து நின்று கொண்டிருந்தது. கடைசி வரை அவனால் ஒருசேர அனைத்து ஒட்டகங்களையும் படுக்க வைக்க முடியவில்லை. அதனால் அவன் அன்று இரவு தூங்கவும் இல்லை.

மறுநாள் காலையில் முனிவரை சந்தித்து நடந்தவற்றை சொன்னான். முனிவர் சிரித்துக் கொண்டே, ‘உன்னுடைய பிரச்சனைகளும் ஒட்டகத்தை படுக்க வைப்பதற்கு சமமானதுதான். வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தானாகவே முடிந்துவிடும். சிலவற்றை நாமே போராடி முடித்து வைக்க வேண்டும். அப்படி செய்தாலும், வேறு ஒரு பிரச்சனை புதிதாக எழுந்து நிற்கத்தான் செய்யும். இவற்றையெல்லாம் சிந்தித்து கொண்டு இருந்தால் கடைசிவரை தூக்கம் இல்லாமல் போய்விடும்.

பிரச்சனைகளை பற்றிய சிந்தனைகளை முதலில் தூக்கி எறி. வருவது வரட்டும் என்று தைரியமாக உன் வேலையை தொடர்ந்து செய். பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தாலே, இன்பமான வாழ்க்கை வாழ முடியும். யாருக்கு தான் பிரச்சினை இல்லை? பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதற்கு பெயர் தான் வாழ்க்கை, அதைப் பற்றி சதா சிந்தித்துக் கொண்டிருப்பது அல்ல’ என்று கூறி புரிய வைத்தார்.