ஆரியர்கள் என்பவர் யார்? அறநெறிகளை அறிந்தவர்கள் “ஆரியர்கள்” (சான்றோர்) என்று அழைக்கப்படுவதை நாம் சாஸ்திரங்களின் வாயிலாக அறியலாம். மனித வாழ்வின் மதிப்பை உணர்ந்து, ஆன்மீகத் தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்ட நாகரிகத்தை உடையவர்கள் ஆரியர்கள் என்று அதாவது சான்றோர்கள் என பகவத் கீதையின் பக்தி மார்க்கத்தில் சொல்லப்படுகின்றன.
ஸ்ரீ பகவான் உவாச்ச
கூடஸ்த்வா காஷ்மலமிடாம் விஷமே
ஸமுபஸ்திதம்
அனார்ய-ஜுஷ்டாமஸ்வர்க்யம் அகீர்தி-கரம்
அர்ஜுனன்
பகவத்கீதை 2.2
பொருள் : பரம புருஷர் [பகவான்] கூறினார்: என் அன்பான அர்ஜுனா, இந்த அசுத்தங்கள் உன் மீது எப்படி வந்தன? வாழ்க்கையின் முற்போக்கான மதிப்புகளை அறிந்த ஒரு மனிதனுக்கு (சான்றோனுக்கு) அவை ஒருபோதும் பொருந்தாது. அவை உயர்ந்த கிரகங்களுக்கு இட்டுச் செல்வதில்லை, மாறாக அவப்பெயருக்கு இட்டுச் செல்கின்றன.
இதன் மூலம், தனது கடமையைச் செய்வதில் தயக்கம் கொண்டிருந்த அர்ஜுனனை அனார்ய, “ஆரியன் அல்ல” (சான்றோன் அல்ல) என்று கிருஷ்ணர் கண்டிப்பதை கீதையில் (2.2) காண்கிறோம்.
மனிதர்களை மிருகங்களிலிருந்த வேறுபடுத்துவது சமய நெறிகளே, அவையனைத்தும் வேதசாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றுவோர் ஆரியர்கள் என்றும், அதன்படி தனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய தவறுபவர்கள் ஆரியர் அல்லாதவர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்.
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள். ஆரியர், அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே இல்லை. இது தொடர்பாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை” என்று குறிப்பிடுகிறார்.
ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு கண்ணோட்டம் பரவலாக உள்ளது.
இதுவும் தவறு. வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிறமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் இருக்கிறது. (10:31:11)
இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும், யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கரு நீல வண்ணம் உடையவர்கள்.
பிறகு, கம்பராமாயணம் (கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில்
“இற்றைநாள்வரை முதலியான் முன்செய்தன
குற்றமுமுளவெனிற் பொறுத்தி கொற்றவர்
அற்றதான் முதகத்தினில் விழித்தல் ஆரிய!
பெற்றனன் விடையெனப் பெயர்த்து போயினான்.
(கும்பகர்ணன் வதைப் படலம்)
என்று வருகிறது. இந்த இடத்தில் உரையாசிரியர்கள் ஆரிய என்பதைத் தலைவன் என்று எழதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் (1370-1443) வாய்த்த திருமந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை
ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச்
செயல்படுவே செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து”
(உபதேசரத்தின மாலை)
என்று எழுதுகிறார் வேதாந்த தேசிகர் (1269-1370)
கான்பனவு முரைப்பனவு மற்றோன்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற்
பான்பெருமாளருள் செய்த பாடல் பத்தும்
பழமறையின் பொருளென்று பரவுகின்றோம்
வேண்பெரிய விரிதிரை நீர் வைத்துள்ளே
வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம்
நம் பெரியோமல்லோம் நான் நன்றுந்தீதும்
நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே
(அம்ருதாஸ்வாதி 37)
என்கிறார். இங்கே ஆரியன் என்பதை சிறப்புடையவன் என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம், ஒரு அன்னிய கிறித்துவ பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற கிறித்துவ மதவெறி கொண்ட பாதிரியார் இதை இன அடையாளமாக மாற்றினார்.
ஆர்ய என்பது ஆண்பால் ஆகும். இதற்குப் பெண்பால் ஆர்யா என்பதாகும். உதாரணம் –: ஸ்ரீ மூக பஞ்சசதியில் உள்ள ஆர்யா சதகம்
ஆர்யாஶதகம் பக்த்யா படதாமார்யாகடாக்ஷேண |
நிஸ்ஸரதி வதநகமலாத்வாணீ பீயூஷதோரணீ
திவ்யா ‖101‖
இதை இயற்றியவர் மூக கவி. ஆவார். ‘மூகன்’ என்றால் ஊமை என்று அர்த்தம். ஊமையாக இருந்த ஒரு பரம பக்தர், காஞ்சீபுரத்தில் குடி கொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார். அதைத்தான் மூக பஞ்ச சதீ என்கிறோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து; ‘சதம்’ என்பது நூறு. நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு ‘சதகம்’ என்று பெயர். காமாக்ஷி அம்பாளின் நாம ரூபங்களின் மகிமையை ‘ஆர்யா’ என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள் இயற்றப்பட்டுள்ளன. (ஆர்யா சதகம்).
மேலும் அம்பாளைப் பற்றிய முக்கியமான ஸ்தோத்திரங்களில் மூன்றாவது ஆர்யா த்விசதி என்ற இந்த ஸ்துதி ஆர்யா என்ற விருத்தத்தில் இருநூறு சுலோகங்கள் கொண்டது. லலிதா ரத்னம் என்றும் அதற்கும் இன்னொரு பெயர் உண்டு. அம்பாளுடைய பிரஸாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற துர்வாஸ மஹரிஷி செய்த நூல் இது. இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் பண்ணினாலே நல்ல வாக்கு உண்டாகும் என்பது கண்கூடு. ஸ்ரீ காமாக்ஷி ஆராதனை கிரமத்தைச் செய்தவரே துர்வாஸர்தான்.
ஆர்ய என்ற ஆண்பாலுக்கு சிவபெருமானையும் ஆர்யா என்ற பெண் பாலுக்கு அம்பிகையையும் நாம் உருவகப் படுத்திக் கொள்ளலாம்.
ஆரிய சமாஜம் என்பதன் பொருள் சான்றோர் கழகம் என்பதாகும். ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தவர் தயானந்த சரஸ்வதி என்பவர்.
கௌதமபுத்தரும் மகாவீரரும் ஆரியர் தான். சமண நூல்களில் ஆரிய என்ற சொல் புத்தரைக் குறிக்கிறது. “உன்னதமான” அல்லது “உயர்ந்த” என்ற பொருளில் ஆர்யா என்பது பௌத்த நூல்களில் ஆன்மீக போர்வீரன் அல்லது நாயகனைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
கூடுதலாக மணிமேகலையில் புத்தரை ஆரியன் என்று குறிப்பிடுவார் சீத்தலை சாத்தனார்,
“ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு’
பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்”
அதோடு புத்தர் தம் சமயத்திற்கே ஆர்ய தர்மம்’ என்று தான் பெயரிட்டார். ஆக இங்கு ஆரிய என்ற சொல்லானது மதிப்பிற்குரிய உயர் பொருளில் தான் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் திருமுறைகள் சிவ பெருமானை ஆரியன் என்றும், திருப்புகழ் முருகனை ஆரியன் என்றும், கம்பராமாயணம் இராமனையும், லட்சுமணனையும், இராவண னையும் கூட ஆரியன் என்று கூறுவது நான் மேற்கூறிய கூற்றிற்கு மற்றொரு சான்று….!
ஸ்ரீ ராமர் மிகவும் மதிக்கப்படும் இளவரசராகவும், பின்னர் அந்தக் காலத்தின் மிகவும் அலங்கரிக்கப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய வம்சமான இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னராகவும் இருந்தார் என்பது நமக்குத் தெரியும். மேலும், அனைத்து நற்குணங்களையும் கொண்டவராகக் கருதப்பட்டார். அதனால்தான் அவர் ஆர்ய புத்திரர் என கம்பனால் அழைக்கப்படுகிறார்.
நாட்டிய சாஸ்திர சொற்களஞ்சியத்தில் ஆரியபுத்திரர் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.
ஆதாரம் : ஞான நூலகம்: நாட்டிய சாஸ்திரம்
நாதஸ்த்ர அத்தியாயம் 19 இன் படி , ஆரியபுத்ர (“உன்னதமானவரின் மகன்”) என்பது நாடகத்தில் (நாட்ய) பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட “முகவரி முறையை” (நாமம்) குறிக்கிறது. தங்கள் இளமைப் பருவத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் தங்கள் கணவரை அழைக்க ஆரியபுத்ர என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் மற்ற சந்தர்ப்பங்களில் ஆரிய (“உன்னதமானவர்”) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஆரியன் என்பது பாண்டிய மரபினரைக் குறிக்கும் சொல்லாக மகாவம்ச நூல் மற்றும் பிங்கல நிகண்டு தெரிவிக்கின்றது. ஆரியன் என்ற சொல்லிற்கு அழகன், உயர்ந்தவன், பாண்டியன் எனப் பொருட்கொண்டு தென்னிலங்கையில் உரோகணை மற்றும் கல்யாணி நாடுகளை ஆரியர் என்ற பெயரில் பாண்டிய வம்சத்தினர் ஆட்சி செய்த செய்தியை மகாவம்சம் கூறுகின்றது. ஆரியர் என்ற சொல் ஆழியர் என்ற சொல்லின் திரிபாகவும் பிங்கல நிகண்டு அறிவிக்கின்றது. அனைத்தும் நம் பாண்டிய மன்னரின் தொடர்பையே காட்டுகின்றது.
திருப்புல்லாணி கோவில் கல்வெட்டில் உள்ள குறிப்புகள் –
கோயிலுக்கு கொடுக்கப்பட்ட தேவதான நிலங்களை பற்றிய குறிப்பில் தெய்வ சிலையான் அழகிய ஆர்ய சக்ரவர்த்தியும் பராக்கிரம பாண்டியனின் மாமன் ஆன ராமன் வகை ஆர்ய சக்கரவர்த்தியும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் ஆரிய சக்ரவர்த்தியை பாண்டியனின் மாமன் என்று கூறப்பட்டுள்ளதால் அவர்கள் பாண்டியனுக்கு பெண் கொடுத்து உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாறவர்மன் குலசேகரன் காலத்தில் ராம்நாடு -சிவபுரியில் தேவர் ஆரிய சக்கரவர்த்தியும் -ஸ்ரீரங்கம் கல்வெட்டில் நல்லூர் செவ்விருக்கைநாட்டு ஆரிய சக்கரவர்த்தி பற்றியும் கூறப்பட்டு உள்ளது. ஆர்ய சக்கரவர்த்திகளுக்கு தனிநின்று வென்ற பெருமாள் என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் மன்னனாகவிருந்த இளவரசன் பற்றிக் குறிப்பிடும்போது, யாழ்ப்பாண வரலாறு கூறும் நூல்களில் முந்தியதாகக் கருதப்படும் கைலாயமாலை, பின்வருமாறு கூறுகிறது.
செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள்
மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை
தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்…………[4]
இதன்படி பாண்டியன் (செழிய சேகரன்) மகன் செகராசன் என்னும் சிங்கை ஆரியன் என்பதே அவனை அடையாளம் காட்டும் தகவல்கள். இதில், முதற்பகுதி தந்தையையும், அடுத்த பகுதி இடப்பட்ட பெயரையும் குறித்தது. மூன்றாம் பகுதி சிங்கை. பிற்பகுதி, ஆரியன் என்பதாகும்
ஒரு சிறந்த அரசு ஆட்சி புரிவதை ஆர்ய ஆட்சி என்றும், வடநாட்டு பெண்கள் தன் கணவன்களை ஆர்ய புத்ர என்றும், குற்றால குறவஞ்சியில் குறத்தி குற்றாலத்தை தென் ஆரிய நாடு என்றும் கூறுவதில் இருந்து ஆரிய என்ற சொல் பண்புமிக்க இடங்களிலும் பயன்படுத்தி உள்ளனர் என்பதை உறுதி செய்யலாம்…!
“சூழ மேதி இலங்குந் துறையிற்
சொறியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும்ப லாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையில்
தாக்க வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடும்
சந்த்ர சூடர்தென் ஆரிய நாடே.”
− திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றித் தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.