முத்துஸ்வாமி தீட்சிதர்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துஸ்வாமி தீட்சிதரின் நினைவு நாள் இன்று. இவர், திருவாரூரில் 1775ல் பிறந்தார். முருகப் பெருமான் அருளால் பிறந்தவர் என்பதால், முத்துக்குமார ஸ்வாமி என்று பெற்றோர் பெயரிட்டனர். தன் தந்தை ராமஸ்வாமி தீட்சிதரிடம் வாய்ப்பாட்டு, வீணை பயின்றார். ஹிந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.

வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம், காவியம் ஆகிய அனைத்தையும் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார். இறைவனைப் பற்றி பாடல்கள் இயற்றத் துவங்கினார். தான் பிறந்த திருவாரூர் கோயில்களில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றினார். காசியில் சிதம்பர யோகி என்ற குருவுடன் 5 ஆண்டுகள் வசித்து இசை, தத்துவ ஞானம் பயின்றார். குரு வாக்கின்படி,  கங்கையில் மூழ்கி எழுந்த இவருக்கு இறைவன் அருளால் வீணை கிடைத்தது. அவரது வாழ்வில் இப்படிப்பட்ட  பல தெய்வீக அனுபவங்கள் நிகழ்ந்துள்ளன.

முத்துஸ்வாமி தீட்சிதர் முருகப் பெருமான் மீது பக்தி கொண்டவர். முருகனையே தன் குருவாக ஏற்றவர். இவரது பாடல்களில் ‘குருகுஹ’ என்ற வார்த்தை கண்டிப்பாக இடம்பெறும். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை, கோயில்களின் வரலாறு குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். ஆனால், என்றும் இவர் மன்னர்களையும் மனிதர்களையும் புகழ்ந்து பாடியதே இல்லை. பலமுறை புனித யாத்திரைகளை மேற்கொண்டு, தெய்வங்களைக் குறித்து பாடிய இவரது காலடி படாத இடமே பாரதத்தில் இல்லை.

நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனைத் தொகுப்புகளை இயற்றிய இவர், 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனை இயற்றியுள்ளார். மிக அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட இவரது கீர்த்தனைகள் உள்ளன. இவர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகவும் தெரிகிறது. ஒருமுறை வறட்சி நிலவிய ஒரு கிராமத்தில் இவர், அமிர்தவர்ஷினி ராகத்தில் கீர்த்தனை பாடி மழையை வரவழைத்தார். இதனால் ‘அமிர்தவர்ஷினி ராகத்தின் பிதாமகர்’ என்று போற்றப்படுகிறார் முத்துஸ்வாமி தீட்சிதர். 64வது நாயன்மார், 13வது ஆழ்வார் என்று போற்றப்படும் முத்துஸ்வாமி தீட்சிதர் 1835ல் தனது 60வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.