மாபியா இல்லாத மாநிலமாக உ.பி. அறிவிக்கப்படும்: யோகி நம்பிக்கை

உத்தர பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உத்தரபிரதேச மாநிலத்தில் மாபியா கும்பலின் அட்டகாசம் ஒழிக்கப்பட்டு வருகிறது. மோசமான மாபியா கும்பலைச் சேர்ந்த பிரமுகர்களால் குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், ஏழை, அனாதை, பெண்கள் தங்குமிடங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மறுபங்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாபியா கும்பல்களிடமிருந்து பறிமுதல் செய்த இடங்களில் மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டப்படும். முதல் கட்டமாக மாபியா கும்பல்கள் ஒழிக்கப்படும். அதன் பின்னர் 2-வது கட்டமாக அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

மாநிலத்தில் தவறு செய்பவர்கள் அமைதியாக வாழ முடியாது. மாநிலத்தில் அமைதியின்மையைத் தூண்டும் குற்றவாளிகள் 7 தலைமுறைகளுக்கு தண்டனையை அனுபவிக்க நேரிடும். ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு மாபியா கும்பல் இல்லாத மாநிலமாக உத்தரபிரதேசம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.