மஹா காலேஷ்வருக்கு இருக்கை

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜோதிர்லிங்கக் கோயில்களில் ஒன்றான உஜ்ஜைன் மஹா காலேஷ்வர் கோயில் உலகப்புகழ் பெற்றது. இந்தக் கோயிலைச் சுற்றி அம்மாநில அரசு ரூ. 851 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற் கட்டப்பணிகள் ரூ. 351 கோடி செலவில் முடிக்கப்பட்டிருக்கின்றன. இதை வரும் அக்டோபர் 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கோயிலைச் சுற்றி 900 மீட்டர் தூரத்துக்கு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து ஆலோசிப்பதற்காக முதன்முறையாக உஜ்ஜைனியில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழக்கமாக முதன்முறையாக இறைவன் `மஹா காலேஷ்வர்’ படம் வைக்கப்பட்டு, அவருக்கு தனி இருக்கையும் போடப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், “இது மஹாகால் அரசு. இங்கு அவர்தான் மன்னர். மஹா காலேஷ்வரின் மண்ணில் கூட்டம் நடத்தவே அவரது ஊழியர்களான நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். 200 ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது. 351 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பகுதிக்கு `மஹாகால் லோக்’ என்று பெயரிடப்படும். அக்டோபர் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும்” என்று தெரிவித்தார். மஹா காலேஷ்வரை உஜ்ஜைன் நகர மக்கள் தங்கள் மன்னராகவே கருதுகின்றனர். ஆரம்பத்தில் இத்திட்டம் ரூபாய் 95 கோடியில் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. பின்னர் இது 856 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடையும்போது காசி விஷ்வநாதர் கோயிலைவிட நான்கு மடங்கு பெரிதாக இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.