மற்றவர் மனதில் இடம் உண்டா?

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கும் ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் எழுதுங்கள். அதிக நேரம் எடுத்துக்கக்கூடாது. முடியவில்லை என்றால் அடுத்த கேள்விக்கு சென்றுவிடவும்.

  1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஐந்து பேரை சொல்லவும். 2. கடந்த 2004, 2009 நாடாளுமன்ற தேர்தலில் பிரபல தலைவர்களை தோற்கடித்த நான்கு பேரை சொல்லவும். 3. சர்வதேச அழகிப் போட்டிகளில் ஜெயித்த இந்திய பெண்கள் நால்வரின் பெயரை சொல்லவும். 4. நோபல் பரிசு வாங்கிய 10 பேரை சொல்லவும். 5. கடைசியாக ஆஸ்கார் அவார்ட் வாங்கிய 5 நடிகர்கள் பெயரை சொல்லவும்.

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியாக இருந்ததா? இல்லை தானே? நம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ, அதில் இடம் பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. ஆனால்……?

கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன. சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன.

மற்றொரு ஐந்து கேள்விகள்: 1. உங்களுக்கு சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்களின் பெயர்கள். 2. ஆபத்தான நேரத்தில் உதவிய ஐந்து பேரின் பெயர்கள். 3. உங்கள் வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலரின் பெயர்கள். 4. உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய சிலர். 5. நீங்கள் அதிக நேரத்தை செலவழிக்க விரும்பும் மூவரின் பெயர்கள்.

சில மணித்துளிகளில் விடைகளை எழுதி முடித்திருப்பீர்களே? இதிலிருந்து என்ன தெரிகிறது?

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள், பணக்காரர்களோ, புகழ்பெற்றவர்களோ அல்ல அவர்கள் உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்கள். மற்றவர்களை மறக்கும் நாம் அவர்களை மறப்பதில்லை. பணம், பட்டம், பதவிகளின் மூலம் பெறும் புகழோ வெற்றியோ நிலையானதல்ல.

பிறர் மீது அக்கறை கொண்டு உதவி செய்து பெறும் புகழும் வெற்றியுமே நிலையானது. உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் இப்படி கேள்விகள் கேட்டு

அவர்களில் ஒருவராவது விடையில் உங்கள் பெயரையும் சொல்வார்கள் என்றால்… நீங்கள் வாழ்க்கையில் ஜெயித்துவிட்டீர்கள். எனவே, அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால் எப்போதும் நல்லதே நினையுங்கள், நல்லதையே சொல்லுங்கள், நல்லதையே செய்யுங்கள்.