மணல் விற்பனை முறைகேட்டில் ரூ.4,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது

சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் விற்பனை விவகாரத்தில் ரூ.4,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில்அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் பொதுத்துறை, நீர்வளத்துறை செயலர்கள், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியதாவது: அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, நடவடிக்கை எடுக்க முடியாது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குவாரி உரிமைதாரர் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா, யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது. மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம். சம்மன் அனுப்ப முடியாது. மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார் அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, “இந்த வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு உதவும் வகையில்தான் வழக்கு தொடர்பான விவரம் கேட்கப்பட்டது. அவை வழங்கப்படவில்லை” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பிறகு எதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது” என்றனர் இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்பதிலளிக்கும்போது, “ஆதாரங்களை சேகரிப்பதற்கான விசாரணைதான் இது. செயற்பொறியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு யூனிட் மணல் விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.1,900 கிடைக்கிறது. ஆனால் தனியாருக்கோ ரூ.20 ஆயிரம் வரை செல்கிறது. இந்த விவரங்களை சேகரிக்க அதிகாரம் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 28 குவாரிகளில் நடத்திய சோதனையில், 27.70 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததன் மூலம், ரூ.4,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது” என்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் தவே, “அரசு யாரையும் பாதுகாக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான உத்தரவை செவ்வாய்க்கிழமைக்கு (நவ.28) தள்ளிவைத்தனர்.
அதிகாரிக்கு நிர்பந்தம்: இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி இருந்த அதிகாரி ஒருவர், ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாகிவிட்டார். பின்னர், அமலாக்கத் துறை முன் ஆஜரான அவர், திருவள்ளூர் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் என்பவர் தன்னைத் தொடர்புகொண்டு, வீட்டை விட்டு வெளியேறி செல்போனை அணைத்து வைத்து விடும்படி அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா ஆகியோர் அறிவுறுத்தியதாக கூறினார்.
மேலும், அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி, அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என மறைமுகமாக தெரிவித்ததாகவும், அதையும் மீறி தான் விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன் என்றும் அவர் கூறினார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.