பிரிவினை தவறு என அவர்கள் நம்புகிறார்கள்

புரட்சியாளரும், சுதந்திர போராட்ட வீரருமான ஹேமு கலாணியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “அகண்ட பாரதம் என்பது உண்மை, பிளவுபட்டிருக்கும் பாரதம் ஒரு கொடுமையான கனவு. கடந்த 1947க்கு முன்பு ஒரு பாரதம் இருந்தது. தங்களின் பிடிவாதத்தால் பாரதத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அங்கு இப்போதும் வலிகள் உள்ளன. அதற்காக பாகிஸ்தான் மீது பாரதம் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நாம் மற்றவர்கள் மீது வலிந்து சென்று தாக்குதல் நடத்தும் கலாசாரத்தை சேர்ந்தவர்கள் அல்ல. தற்காப்பிற்காக கடுமையான பதிலடியை கொடுக்கும் கலாசாரத்தைக் கொண்டவர்கள். இதற்கு முன்பும் அப்படிச் செய்திருக்கிறோம். இனிமேலும் செய்வோம். பாரதத்தில் இருந்து பிரிந்தது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் அனைவரும் கூறுகிறார்கள். எது சரியோ அது நிலையாக இருக்கும். தவறானவைகள் வந்து வந்து போகும். உங்களின் செழுமையான சிந்திக் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களுக்காக, தேசப் பிரிவினையின்போது அந்த பாரதத்தில் இருந்து இந்த பாரதத்திற்கு வந்த உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்” என கூறினார். இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.