பாரத கண்ணோட்டத்துடன் கூடிய வரலாறு

நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களும் அறிவியல், பகுத்தறிவு மற்றும் விரிவான பாடத்திட்டத்தை கொண்டிருக்க வேண்டும் என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பு கூறியுள்ளது. மேலும், “இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பின்மைவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் நாட்டின் கல்வி முறையை ஆயுதமாகப் பயன்படுத்தி, அவர்களின் ஒருதலைப்பட்ச நிகழ்ச்சி நிரலை திணிக்கின்றனர். இதன் காரணமாக வரலாறு உள்ளிட்ட சில பாடங்களின் பாடத்திட்டம் பழி மற்றும் சர்ச்சைகளுக்கு ஆதாரமாக உள்ளது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தெளிவான வரைபடத்தின் ஆதாரமாக இருப்பதற்குப் பதிலாக, இந்த பாடத்திட்டங்கள் தீய நிகழ்ச்சி நிரலை இயக்கப் பயன்படுத்தப்பட்டது. இது கல்வி முறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. பாரதத்தின் வரலாறு என்பது, டெல்லி அல்லது இடைக்காலத்தின் சில ஆட்சி வம்சங்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தை ஒழித்து, பாரத வரலாற்றின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய முன்னுதாரணத்தை கொண்டு வருவது காலத்தின் தேவை. அஹோம் அரசர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசு, கோண்ட் போன்ற பழங்குடி வம்சங்களின் புகழ்பெற்ற வரலாறுகளுக்கு பாடத்திட்டத்தில் உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு, உண்மை அடிப்படையிலான முழுமையான அணுகுமுறை, திறனாய்வு சிந்தனை வளர்ச்சி மற்றும் 21ம் நூற்றாண்டின் செயற்கை நுண்ணறிவின் உருமாறும் சகாப்தத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் அல்லது புதுப்பிக்கப்பட வேண்டும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) எடுத்த நடவடிக்கைகள் இன்றைய தேவைக்கேற்ப கல்வித்துறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.பி.வி.பியின் தேசிய பொதுச்செயலாளர் யாக்யவல்கியா சுக்லா பேசுகையில், “புகழ்பெற்ற பாரத வரலாற்றை முழுவதுமாக கற்பிக்க வேண்டும், டெல்லியை மையமாக வைத்து அல்லது ஒரு சுல்தான் ஆட்சியின் ஒரு அம்சத்தை மட்டும் கற்பிக்கக்கூடாது. கடந்த காலங்களில் அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள் நாட்டின் வரலாற்றிற்கு நீதி வழங்காதது மிகவும் வருந்தத்தக்கது. நாட்டின் கல்வி முறையின் அனைத்து நிலைகளிலும் பாடத்திட்டத்தை புதுப்பித்து, கடந்த காலத்தில் நடந்த தவறுகளை சரிசெய்வது முக்கியம். என்.சி.இ.ஆர்.டி மற்றும் பிற கல்வி நிறுவனங்களால் இந்த திசையில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாற்றத்தையும் எதிர்மறையாக பார்க்கும் மோசமான பழக்கத்தை இடதுசாரிகள் மாற்றிக்கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் உள்ளடக்கிய தன்மையை அறிமுகப்படுத்துவது இப்போது கட்டாயமாக உள்ளது” என தெரிவித்தார்.