பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல் முன்னாள் பாதிரியார்கள் கைது

கொடுங்கையூர், அமுதம் நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 44; பா.ஜ., மாவட்ட செயலர். இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறிருப்பதாவது:

கடந்த 27ம் தேதி மாலை, என் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் இருவர், ‘ஓசன்னா டவர் சபை நடத்தும் விடுமுறை வேதாகம பள்ளி 2024’ என்று எழுதி இருந்த சிறிய துண்டு பிரசுரங்களை கொடுத்து பரப்புரை செய்தனர். நான், ‘எதற்காக குழந்தைகளிடம் இதையெல்லாம் கொடுத்து பேசி கொண்டிருக்கிறீர்கள். அவர்களது பெற்றோரிடம் சென்று கொடுங்கள்’ என்று சொன்னேன்.

அங்கிருந்த இருவர் அருகில் இருந்த கட்டையை எடுத்து என்னை அடித்தனர். அதை பார்த்த அப்பகுதியினர் ஓடி வந்தவுடன், அவர்கள் தப்பினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் பாதிரியார்கள், பெரவள்ளூர், எஸ்.ஆர்.பி.காலனி, எட்டாவது தெருவை சேர்ந்த டேவிட் ஜீவராஜ், 67, கொடுங்கையூர், எவெரடி காலனியை சேர்ந்த பழனி, 67, ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.