டீக்கடைக்காரரின் கடைசி பயணம்

அவர் சாதாரண டீக்கடைக்காரர் மட்டுமல்ல. உலகைச் சுற்றிவந்த ஒரு மிகச்சிறந்த சுற்றுலாப் பயணியும்கூட. வாழ்க்கை வாழ்வதற்கே என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வந்த அந்த டீக்கடைக்காரரின் பெயர் விஜயன். மற்றவர்களைபோல அவரும் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார். கேரளாவின் கொச்சியில், ‘ஸ்ரீ பாலாஜி காபி’ என்ற கடையை நடத்தி வந்தார். 2007ல் அவருக்கு உலகைச் சுற்றிப் பார்க்கும் ஆசை வந்தது. இந்த ஆசையை மனைவி மோகனாவிடம் கூற, அவரும் அதற்கு சம்மதித்தார். அப்பது முதல் கடையில் லாபத்தில் தினமும் 300 ரூபாயை பயணத்துக்காக தம்பதியர் சேர்த்து வைத்தனர். தேவையான பணம் சேர்ந்ததும், உலகைச் சுற்றிப்பார்க்க கிளம்பிவிடுவார்கள். இப்படி முதலில் எகிப்துக்கு பயணப்பட்ட இந்த தம்பதி, அடுத்தடுத்து அமெரிக்கா, ரஷ்யா என 26 நாடுகளைச் சுற்றிப் பார்த்துள்ளனர். சுற்றிப் பார்ப்பது மட்டுமின்றி, தங்கள் அனுபவங்களையும் புத்தகமாகவும் எழுதியுள்ளனர். கேரளாவின் பிரபலங்களான மோகன்லால் முதல் அமைச்சர்கள் வரை பலரும் விஜயனின் ரசிகர்கள். அவரைச் சந்தித்து பயண அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்வார்கள். டீக்கடை வருமானத்தில் உலகைச் சுற்றிப் பார்த்த விஜயன் தம்பதி, அதற்காக டீயின் விலையை உயர்த்தியதில்லை. ஒரு டீயின் விலை 5 ரூபாய்தான். மக்களுக்கு விஜயனைப் பிடித்துப் போனதற்கு இதுவும் ஒரு காரணம். இப்படி மீண்டும் பணம் சேர்த்து அடுத்ததாக ஜப்பானுக்கு செல்ல தயாரானார் விஜயன். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள கேரள சுற்றுலாத் துறை, ‘விஜயன் தன் கடைசி பயணத்தி மேற்கொண்டார்’ என பதிவிட்டுள்ளது. பல பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.