சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை

ஐ.நா.வில் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை உள்ளடக்கிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மும்பை தாஜ் ஹோட்டல் பொது மேலாளர் கரம்பீர் கங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “அன்றைய தினம் இந்த ஒட்டுமொத்த உலகமுமே எனது நாட்டின் மீதும் நான் வேலை பார்த்த மும்பை தாஜ் ஹோட்டலின் மீதும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பார்த்தது. நான் அப்போது அங்கு பொது மேலாளராக இருந்தேன். மூன்று நாட்கள் இரவு பகலாக தாக்குதல் நடந்தது. 34 உயிர்கள் பலியாகின. அதில் என் மனைவியும், இரண்டு மகன்களும் கூட அடங்குவர். அந்தத் தாக்குதலில் நான் எனது அனைத்தையுமே இழந்தேன். எங்களது ஊழியர்கள் பலரையும் இழந்தோம். அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தண்டனையை அனுபவித்துவிட்டனர். ஆனால் அந்தத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டியவர்கள், நிதி உதவி செய்தவர்கள், ஒருங்கிணைத்தவர்கள் அனைவரும் சுதந்திரமாக உலவுகின்றனர். எங்கள் ஹோட்டல் ஊழியர்கள் துணிச்சலுடன் சில விருந்தினரைக் காப்பாற்றினர். நாங்கள் பயங்கரவாதத்தை எதிர்த்து செயல்பட்டோம். பயங்கரவாத தாக்குதலில் ஒட்டுமொத்தமாக சேதமடைந்த ஹோட்டலை நாங்கள் வெறும் 21 நாட்களிலேயே சீராக்கினோம். அதற்காக சர்வதேச அளவில் எங்களுக்கு பாராட்டுகள் கிடைத்தன. ஆனால், 14 ஆண்டுகளாக எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. வேதனையுடன் இருக்கிறோம். இன்று நான் இந்த ஐ.நா அரங்கில் சர்வதேச சமூகத்திடம் நான் கோரிக்கை விடுக்கிறேன். சர்வதேச நாடுகளும் நீதியை நிலைநாட்ட இணைந்தே செயல்பட வேண்டும். ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடம் இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.