சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனம் இல்லை

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தேவஸ்தானத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சபரிமலை, நிலக்கல் பகுதி சிறப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இது பெரியார் புலிகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலேயே உள்ளது. இந்த பகுதி சீசன் அல்லாத நாட்களில் வன விலங்குகளின் வாழ்விடமாக விளங்குகிறது. எனவே சபரிமலை, நிலக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தை மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியான சேவைக்ளுக்கு பயன்படுத்தக்கூடாது. மண்டல, மகரவிளக்கு காலங்களில் இதனை பயன்படுத்த முன் அனுமதி பெற வேண்டும். கடந்த 2018 முதல் இதுவரை 12 முறை மட்டுமே ஹெலிகாப்டர்கள் இங்கு தரையிறங்கி உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான். இவர்களில் யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கக் கூடாது. வி.ஐ.பி. தரிசன முறை சபரிமலையில் இல்லை என்ற நடைமுறையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக, சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் இணையதளத்தில் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அதில், ரூ. 48 ஆயிரம் கட்டணத்தில் ஹெலிகாப்டர் பயணத்துடன் சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், சபரிமலையில் வி.ஐ.பி. தரிசன முறை என்பது கிடையாது. இது தேவஸ்தான நிர்வாகம், மறைமுகமாக வி.ஐ.பி தரிசன முறையை கொண்டுவரும் நோக்கில் செயல்படுத்தப்படுவதாக பக்தர்கள் அசசம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கு விசாரணையின் போது தனியார் நிறுவனம் இணையதளத்தில் அந்த விளம்பரத்தை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரியது என்பது நினைவு கூரத்தக்கது.