கோயில் விழாவை சீர்குலைக்க கம்யூனிஸ்ட்டுகள் சதி

கேரளாவில் உள்ள திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் வரும் ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோவில் திருவிழாவில் குழப்பம் விளைவிக்க இடதுசாரி கட்சியின் மாணவர் பிரிவான டி.ஒய்.எப்.ஐ மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பி.எப்.ஐ அமைப்பினர் முயற்சி செய்கின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள இந்த கோயில் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதுகுறித்து காவல்துறையுடன் பேசுகையில், கோயிலை ஒட்டிய சாலைகளில் காவிக்கொடிகளோ, பேனர்களோ கட்டப்படாது, கோயிலின் கோபுரம், கோயில் குளம் மற்றும் கோயில் சுவர்களில் மட்டும் காவி கொடிகள், பேனர்கள் கட்டப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோயிலின் மேல் காவி கொடிகள் கட்டப்பட்டன. ஆனால், இதற்கு எதிராக களமிறங்கிய டி.ஒய்.எப்.ஐ அமைப்பினர், வேண்டுமென்றே கோயில் கோபுரத்தின் மேல் காவிக்கொடியை வைத்தால், அங்கு இடதுசாரிகளின் டி.ஒய்.எப்.ஐ கொடியும் கட்டப்படும் என மிரட்டினர். கோயில் வளாகம், கம்யூனிஸ்ட் கொடிகள் மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்படும் எனக் கூறி அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால், அவர்களை கோயிலில் இருந்த பக்தர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சரணம் கோஷமிட்டு தடுத்து நிறுத்தினர்.

டி.ஒய்.எப்.ஐ மாவட்ட செயலாளர் பி. நிஜாம் தலைமையில் ஏராளமான குண்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் ஹிந்துக்கள் அல்லாதவர்களுடன் சேர்ந்து டி.ஒய்.எப்.ஐ அமைப்பினர் கோயிலின் விழாக்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர், டி.ஒய்.எப்.ஐ.யை மறைவாக பயன்படுத்தி கோயில் திருவிழாவை குளறுபடி செய்ய இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர் என விழாக்குழுவினர் குற்றம் சாட்டினர். அப்பகுதியில் கலவரத்தை தூண்டும் முயற்சியில் பி.எப்.ஐ அமைப்பினர் ஈடுபட்டதாக பக்தர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வீதியுலா வந்து இறைவனின் திருநாமத்தை கோஷமிட்டனர். கோயில் திருவிழாவை சீர்குலைக்க வந்தவர்கள் திரும்பிச் செல்லாமல் நாங்கள் இங்கிருந்து அசைய மாட்டோம் என பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குள் சி.பி.ஐ.(எம்) தலைமைக்கு இத்தகவல் சென்றது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம் என்பதை உணர்ந்து, கட்சித் தலைமை இவ்விவகாரத்தில் தலையிட்டது. பக்தர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் கட்சித் தலைமை உத்தரவையடுத்து, டி.ஒய்.எப்.ஐ செயல்பாட்டாளர்களும் விழாவை சீர்குலைக்க அவர்களுடன் வந்த ஹிந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினரும் அங்கிருந்து திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து திரும்பிச் சென்றனர்.