கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது

இலங்கையைச் சேர்ந்தவர் மானுவேல் மரியா செல்வம். கிறிஸ்தவ பெண் மத போதகரான இவர், கடந்த 2016ம் ஆண்டு பாரதம் வந்தார். பின்னர், சென்னை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி மத போதகராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பேராயர் காட்ஃப்ரே வாஷிங்டன் நோபுள் என்பவர் இந்த பெண் மத போதகர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், “இலங்கையைச் சேர்ந்த மரியா, எனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 8.50 லட்சத்தை ஏமாற்றி பறித்துக்கொண்டார். பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்தார். என்னைபோலவே இதேபோல பல பாதிரிகளையும் ஏமாற்றியுள்ளார்” என்று கூறினார். இப்புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மரியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். மரியாவிடம் குடியுரிமை ஆவணங்கள் குறித்த விசாரணைபோது அவரிடம் இந்திய முகவரியுடன் கூடிய இந்திய பாஸ்போர்ட் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கிறிஸ்தவ மதபோதகர் மானுவேல் மரியா செல்வம், போலி ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்கி, போலியாக இந்திய குடியியுரிமை மற்றும் பாஸ்போர்ட் பெற்றதுதெரியவந்தது. கடந்த 6 ஆண்டுகளாக போலி பாஸ்போர்ட் வைத்து இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மானுவேல் மரியா செல்வத்தை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.