காசி தமிழ்ச் சங்கமம்

2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற உள்ள “காசி தமிழ்ச் சங்கமம்” பற்றிய அறிவிப்பை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன் இணைந்து வெளியிட்டார். “காசி தமிழ்ச் சங்கமம்” நிகழ்வுக்கான பதிவுக்குரிய இணையதளத்தையும் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதான், “பாரதம் என்பது நாகரீக தொடர்பின் அடையாளமாகும். காசி தமிழச் சங்கமம் என்பது பாரதத்தின் நாகரீக சொத்துக்களில் உள்ள ஒற்றுமையை அறிந்து கொள்வதற்கான சிறந்த மேடையாக இருக்கும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கட்டமைப்பு மற்றும் உணர்வின்படி இந்த சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பண்டைய பாரதத்துக்கும், சமகால தலைமுறைக்கும் இடையே பாலமாக இருக்கும். இலக்கியம், தொன்மை நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், யோகா, ஆயுர்வேதம் போன்றவற்றுடன் நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தக பரிவர்த்தனைகள், கல்வி, தொழில்நுட்பம், அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் போன்றவையும் காசி தமிழ்ச் சங்கமத்தின் மையப் பொருட்களாக இருக்கும். இவற்றின் மீது விவாதங்களும், விரிவுரைகளும், கருத்தரங்குகளும் நடத்தப்படும். துறை சார்ந்த நிபுணர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், தொழில்முறை பழகுநர் ஆகியோருக்கு இது தனித்துவ கற்றல் அனுபவமாக இருக்கும். இந்த சங்கமம் நிகழ்வு நிறைவடையும் போது தமிழகத்தில் இருந்து வருவோர் காசி குறித்த ஆழமான அனுபவத்தை பெறுவார்கள். அனுபவ பகிர்வு, பயணங்கள், உரையாடல்கள், ஆரோக்கியமான அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் வளமான கலாச்சாரம் குறித்து காசியைச் சேர்ந்தவர்களும் அறிந்துகொள்வார்கள்” என்று கூறினார். பல நூற்றாண்டுகளாக நீடித்து இருக்கும் தமிழ் கலாச்சாரம் மற்றும் காசிக்கு இடையேயான தொடர்புகளை மீண்டும் கண்டறியவும் உறுதி செய்யவும் கொண்டாடவும் ‘பாரதிய பாஷா சமிதி’ ஒரு முன்மொழிவை கண்டுள்ளது. அதன்படி 2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை வாரணாசியில் ஒரு மாத கால காசி தமிழ்ச் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரத கலாச்சாரத்தின் இரண்டு தொன்மையானபகுதிகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் அறிஞர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்வது கருத்தரங்குகள், விவாதங்கள் நடத்துவது, இரு பகுதிகளுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொண்டு வருவது, ஞானம் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களின் இரண்டு பகுதிகளை மிக நெருக்கமாக கொண்டுவருவது, நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை புரிந்துகொள்வதும், இரு பகுதிகளின் மக்களிடையேயான உறவை ஆழப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.