“கடவுள்தான் என்னை அனுப்பி வைத்தார்” – பிரதமர் மோடி பேட்டி

கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார். நான் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு கடவுள் அளித்த சக்திதான் காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது எப்போதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது எப்படி என்று பிரதமர் மோடியிடம், செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்: நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். ரத்தமும் சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன்.

அப்படி இல்லையென்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார். பிரதமரின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் நேற்று முன்தினம் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கான வாகனப் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. இதனால் அந்த நாட்டுக்கு நாம் பயப்படவேண்டும் என்று இங்குள்ள கட்சித் தலைவர்கள் பயந்து கொண்டு இருந்தனர். ஆனால் எதிரிகள் நம் நாட்டை சீண்ட முயன்றபோது அவர்களது நாட்டுக்குள்ளேயே நுழைந்து அவர்களைத் தாக்கி அழித்தோம். பாகிஸ்தானுக்காக சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் இன்னும் அனுதாபப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

உ.பி.யில் 79 தொகுதிகளை இண்டியா கூட்டணி வெல்லும் என்று அகிலேஷ் யாதவ் கூறுகிறார். ஆனால் அது நடக்கப் போவதில்லை. நாட்டு நலனுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மறுபக்கம், நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த இண்டியா கூட்டணி முயற்சிக்கிறது. நாடு வளம் பெற மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.