கடவுளுக்குத் தெரியும்

ஒரு கோயிலில் ஒரு அர்ச்சகர் இருந்தார். அந்த கோயிலின் பின் பகுதியில் ஒரு பூனைக்குட்டி சில நாட்களாக சுற்றி வந்தது. அந்த அர்ச்சகர் அதற்கு பால் ஊற்றி பாதுகாத்து வந்தார். ஒரு நாள் அந்த பூனைக் குட்டி மரத்தின் உச்சியில் ஏறிவிட்டது. கீழே இறங்க பயந்து கொண்டு இருந்தது. அர்ச்சகரும் பாலை வைத்து அழைத்து பார்த்தார். ஆனால் அது கீழே இறங்க பயந்தது.

அர்ச்சகர் என்ன செய்யலாம் என்று யோசித்தார். மரத்தின் மேல் ஏறும் அளவிற்கு மரக்கிளை வலிமையானதல்ல. எனவே ஒரு கயிற்றை கொக்கியுடன் வீசி மரக்கிளையை கயிற்றை பிடித்து இழுத்து வளைத்தால் பூனை குதித்து விடும் என்று யோசித்து அதன்படி செய்தார். கயிற்றை இழுக்க, கிளை வளைந்து கீழ் நோக்கி வந்தது. ஆனால் கொக்கி வழுக்கி விடவே கிளை வேகமாக தன்னிலை அடைய பூனைக்குட்டி தூக்கி எறியப்பட்டு கண்ணை விட்டு மறைந்தது. அர்ச்சகர் தன்னால் முடிந்தவரை பூனைக் குட்டியை தேடிப்பார்த்தார். ஆனால், அது கிடைக்கவில்லை.

மனம் வருந்தி இறைவனிடம் தான் செய்த தவறால் பூனைக்குட்டிக்கு ஆபத்து நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அடுத்த நாள் அவர் கோயிலுக்கு வரும் ஒரு பெண்ணை மளிகைக் கடையில் கண்டு நலம் விசாரித்தார். அந்த பெண் கூடையில் பூனைக்கான பிஸ்கட் இருப்பதை பார்த்து, வீட்டில் பூனை வளர்கிறாயா? என்று கேட்டார். அந்த பெண் இல்லை சாமி, என் மகள் இரண்டு நாட்களாக பூனைக் குட்டி வேண்டும் வளர்க்க என்று என்னிடம் கேட்டாள். நான் மறுக்கவே அவள் அழ ஆரம்பித்தாள். நானும் அவளை சமாதானப்படுத்த கடவுளிடம் பூனைக் குட்டி கேள். அவர் கொடுத்தால் நாம் வளர்க்கலாம் என்று சொன்னேன்.

என் குழந்தை உடனே அங்கேயே கண்னை மூடி பூனைக்குட்டி வேண்டி பிரார்த்திக்க ஆரம்பித்தாள். என்ன ஆச்சரியம். ஒரு பூனைக்குட்டி ஆகாயத்தில் கால்களை விரித்தபடி பறந்து வந்து குழந்தையின் காலடியில் விழுந்தது. பிறகு அதை எடுத்து பால் கொடுத்து வளர்க்கிறோம் என்று சொன்னாள். அர்ச்சகர் கடவுளின் லீலையை மனதில் எண்ணியபடி கடவுளின் கருணையே கருணை என்று சொல்லி நகர்ந்தார்.

நீதி : யாரை எப்படி எங்கு எப்பொழுது சேர்க்க வேண்டும் என்பது கடவுளுக்கு நன்கு தெரியும்…