ஏ.டி.எம் கொள்ளையர்கள் கைது

திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள நான்கு ஏ.டி.எம் மையங்களில் கடந்த 12ம் தேதி அதிகாலை ரூ. 73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் விசாரணையில், ஹரியானா மாநிலம் மேவாத் கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. இவர்கள், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தங்கியிருந்து கொள்ளையை அரங்கேற்றியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டு கொள்ளையர்களை தேடிவந்தனர். இதில், கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நபர்களான ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் மற்றும் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆசாத் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களை விமானம் மூலமாக சென்னைக்கு அழைத்து வந்தனர். கொள்ளையர்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.